Sri Lanka vs England Test Match : முதல் போட்டியிலேயே சாதனை படைத்த கேப்டன்.. இலங்கை வீழ்த்தியது இங்கிலாந்து..

Sri Lanka vs England Test Match : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Aug 25, 2024 - 07:25
Aug 25, 2024 - 10:25
 0
Sri Lanka vs England Test Match : முதல் போட்டியிலேயே சாதனை படைத்த கேப்டன்.. இலங்கை வீழ்த்தியது இங்கிலாந்து..
வெற்றிக் களிப்பில் இங்கிலாந்து வீரர்கள்

Sri Lanka vs England Test Match : இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டிமுத் கருணரத்னே 2 ரன்களிலும், நிஷன் மதுஷ்கா 4 ரன்களிலும், ஏஞ்சலோ மாத்யூஸ் டக் அவுட் ஆகியும் வெளியேற, இலங்கை அணி 6 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து, குஷல் மெண்டிஸ் 24 ரன்களிலும், தினேஷ் சண்டிமால் 17 ரன்களிலும், கமிந்து மெண்டிஸ் 12 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால், இலங்கை அணி 113 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், அணியின் ஆபந்தவானாக களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 74 ரன்களை எடுத்து அணியின் வீழ்ச்சியை தடுத்தார்.

அதே சமயம் தனது அறிமுகப் போட்டியில் 9ஆவது வீரராக களமிறங்கிய மிலன் ரத்நாயகே அபாரமாக ஆடினார். 135 பந்துகளை சந்தித்த மிலன், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்தார். இதன் மூலம் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 9ஆவது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்னதாக, 1983ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் பல்விந்தர் சந்து 71 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 41 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில், 338 ரன்கள் எடுத்தது. ஜேமி ஸ்மித் 148 பந்துகளில் 111 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரி புரூக் 56 ரன்களும், ஜோ ரூட் 42 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸை போலவே, 2ஆவது இன்னிங்ஸிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினர். நிஷன் மதுஷ்கா, குஷல் மெண்டிஸ் இருவரும் டக்-அவுட் ஆகி வெளியாகினர். திமுத் கருணரத்னே 27 ரன்களும், தனஞ்செய சி சில்வா 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

ஆனால், ஆஞ்சலோ மேத்யூஸ் தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றினார். அவர், 65 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். அபாரமாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக, தினேஷ் சண்டிமால் 79 ரன்கள் எடுத்தார். இதனால், இலங்கை அணி 326 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகப்பட்சமாக, ஜோ ரூட் 62 ரன்களும், ஜேமி ஸ்மித் 39 ரன்களும், டான் லாரன்ஸ் 34 ரன்களும், ஹாரி புரூக் 32 ரன்களும் எடுத்தனர். இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேலும், இதன் மூலம் கேப்டனாக பொறுப்பேற்று, முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றியை தேடித்தந்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையை ஓலி போப் படைத்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் கூட, கேப்டனாக முதல் போட்டியிலேயே வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow