இறுகும் அமலாக்கத் துறையின் பிடி.. அமைச்சரின் சொத்து விவரங்களை கேட்டு கடிதம்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள்கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

Sep 28, 2024 - 11:21
 0
இறுகும் அமலாக்கத் துறையின் பிடி.. அமைச்சரின் சொத்து விவரங்களை கேட்டு கடிதம்
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து விவரங்கள்கேட்டு அமலாக்கத்துறை கடிதம்

கடந்த 2001-2006ம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை பின்பற்றி அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என கடந்த 2022 ஆம் ஆண்டு அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை விசாரிக்கலாம் எனவும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்து விவரங்களை திரட்டும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராகவும், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பிற நபர்கள் குறித்த சொத்து விவரங்கள் கேட்டு 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்கள், மதுரையில் தல்லாகுளம் உள்ளிட்ட 2 சார் பதிவாளர் அலுவலகங்கள், சென்னையில் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட மூன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் என 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow