Vijay Antony: “செருப்பு இல்லாம நடங்க..” டிப்ஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. வெளுத்துவிட்ட பிரபல மருத்துவர்

Actor Vijay Antony : செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள், அதோட அருமை உங்களுக்கு புரியும் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள பிரபல மருத்துவர், செருப்பு அணியுங்கள், முட்டாள்களின் பேச்சை கேட்காதீர்கள் என விஜய் ஆண்டனியை வெளுத்துவிட்டுள்ளார்.

Jul 17, 2024 - 16:31
Jul 18, 2024 - 10:20
 0
Vijay Antony: “செருப்பு இல்லாம நடங்க..” டிப்ஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. வெளுத்துவிட்ட பிரபல மருத்துவர்
Dr J Mariano Anto Bruno Mascarenhas Criticized Actor Vijay Antony

சென்னை: கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோ, டைரக்டர் என கலக்கி வருகிறார் விஜய் ஆண்டனி(Actor Vijay Antony). அவரது நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளியாகியிருந்தது. தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, எங்கு சென்றாலும் ஏதாவது ஏடாகூடாமாக பேசுவதில் விஜய் ஆண்டனியை மிஞ்ச ஆள் கிடையாது. அப்படி அவர் கடைசியாக பேசிய விஷயம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதாவது தான் செருப்பு அணிவதை தவிர்த்துவிட்டேன் என விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

”செருப்பு இல்லாம நடந்து பாருங்க, அதோட அருமை உங்களுக்கு புரியும். சீரியஸா சொல்றேன், ஒரு மாதம் செருப்பு இல்லாமல் நடந்தால், அதன் பயன் உங்களுக்குத் தெரியும், அது நல்ல அனுபவம்” என்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து விஜய் ஆண்டனியின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரபல மருத்துவர் மரியானோ அன்டோ புருனோ மஸ்கரென்ஹாஸ் தனது முகநூலில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், “குடல் புழுக்கள் என்று சில உள்ளன. ஆங்கிலத்தில் Hook Worm. இவற்றில் பல இருந்தாலும் Ancylostoma duodenale மற்றும் Necator americanus.என்பவை மனிதர்களை தாக்கும் வகைகள்.”

“இவை குடலினுள் இருந்து கொண்டு, தினமும் சிறிது சிறிதாக இரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு இரத்த சோகை (Anemia) வரும். நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய முடியும். இரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பிராணவாயு (ஆக்சிஜன் Oxygen) போதிய அளவு செல்லாது. எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.”

“இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால் கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும். இரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம். (Anemia causing Heart Failure) மேலும் இரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்தில் சிக்கல் வரும்.. பேறுகால மரணங்கள் (Maternal Mortality), பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு (Infant Mortality) இரத்த சோகை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.”

“அதேபோல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி (Stunted Growth) பாதிக்கப்படும். எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக்கூடிய பிரச்சனை அல்ல. பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக்குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளின் மூலம் குடற்புழுக்கள் ஆகும். அதேபோல் இரத்த சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் வரும். சரி இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன என்றால் அதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. காலரா, டைஃபாயிடு போன்ற கிருமிகளும் குடலினுள் வந்து பிரச்சனை செய்கின்றன.”

“ஆனால் காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைஃபாயிடு கிருமியும் அப்படியே. எனவே நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைஃபாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும். ஆனால், குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த  Necator americanus புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து இரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் இரத்தக்குழாயில்  (venules) இருந்து காற்றுப்பைகளுக்குள் (Alveoli) வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் (Trachea) மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் (Esophagus) மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன.”

“ஒருமுறை குடலினுள் சென்ற Necator americanus புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தைத்தை உறிஞ்சுகின்றன. (காலரா, டைஃபயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்) காலரா, டைஃபாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும். ஆனால் இரத்த சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதாது. உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா, larva) தொற்றுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தவிர்க்க முடியும்?, சிம்பிள் செருப்பு அணியுங்கள் இதுபோன்ற அரைவேக்காடுகளின் முட்டாள்தனமாக உளறல்களை நம்பி இரத்த சோகைக்கு உள்ளாகாதீர்கள்.” என விஜய் ஆண்டனியை கடுமையாக விமர்சித்துள்ளார்.  
 
மேலும், “எனக்கு இரத்த சோகை வந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா..? குடற் புழுக்களில் இரண்டு வகை மனிதர்களை தாக்கும் என்று பார்த்தோம் அல்லவா. இதில் Necator americanus என்பது கால்வழியாக மட்டுமே ஒருவரை தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கு மட்டுமே பாதிப்பு. ஆனால் Ancylostoma duodenale என்பது கால் வழியாகவும் தாக்கும், வாய் வழியாகவும் தாக்கும். எனவே நீங்கள் செருப்பு போடவில்லை என்றால் உங்களுக்கும் பிரச்சனை, மற்றவர்களுக்கும் பிரச்சனை. பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகு இரத்த சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால் அது தான் அறிவியல்” என குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow