Cow Milk Side Effects : குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாதா... ஏன்? 

Cow Milk Side Effects on Baby in Tamil : பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவிர்த்து மாட்டுப்பால் கொடுக்கப்படுகிறது. இது குழந்தையின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர் ஜெகதீசன் எச்சரிக்கிறார்.

Sep 4, 2024 - 13:51
Sep 4, 2024 - 14:30
 0
Cow Milk Side Effects : குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்கக்கூடாதா... ஏன்? 
Cow Milk Side Effects on Baby in Tamil

Cow Milk Side Effects on Baby in Tamil : பாலூட்டி உயிரினங்களுக்கு பிறந்ததும் தாய்ப்பால்தான் முதல் உணவு. உடலின் வளர்ச்சிக்கு ஆதாரமான அனைத்தும் தாய்ப்பாலில் இருப்பதால் தாய்ப்பாலைத் தவிர்க்கவே கூடாது. முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் இப்போது நான்கைந்து மாதங்களிலேயே குழந்தைக்கு தாய்ப்பாலை நிறுத்தி விட்டு மாட்டுப்பால் கொடுக்கின்றனர். இதனால் தாய்ப்பால் மூலம் கிடைக்க வேண்டிய சத்துகள் குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்காது. அது மட்டுமல்ல குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுக்கவே கூடாது என்று எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டி.ஜெகதீசன்... 

‘‘குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதற்காக வேறு பால் கொடுக்கக் கூடாது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எதுவாக இருந்தாலும் தாய்ப்பால் சுரக்கும் வரை பொறுத்திருந்து கொடுக்க வேண்டும். 24 மணி நேரம் குழந்தை எதுவும் உட்கொள்ளாமல் இருக்க முடியும். ஏனென்றால் அதற்குத் தேவையான ஆற்றலை தாயிடமிருந்து அது பெற்றிருக்கும். நீரிழிவு நோயுடைய கர்ப்பிணி பிரசவிக்கும் குழந்தைக்கு தேவையான க்ளுக்கோஸ் இருக்காது. எனவே தாய்ப்பால் சுரக்கும் வரை பொறுத்திருக்காமல் க்ளுக்கோஸ் கலந்த தண்ணீர் கொடுக்கலாம். 

குழந்தை பிறந்து ஓராண்டு காலம் வரையிலும் தாய்ப்பால் தவிர்த்து வேறு எந்தப் பாலும் கொடுக்கக் கூடாது. தாய் உயிருடன் இல்லாத சூழலில் கூட தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். எச்சூழலிலும் வேறு பால் கொடுக்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகளும் பசும்பால் குடிக்கக் கூடாது. ஏனென்றால் பசும்பாலில் உள்ள A1 பீட்டா கேசீன் எனும் புரதம் BCM - 7 ஆக மாற்றப்படுகிறது. அது கர்ப்பிணிகளின் ரத்தத்தில் கலந்து கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது. இதனால் அக்குழந்தை ஆட்டிசம் போன்ற மூளை வளர்ச்சிக் குறைபாட்டுக்கு ஆளாக நேரிடலாம். 

ஒரு வயது வரை உள்ள குழந்தைக்கு புட்டிப் பால் கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி குறைபாடு மட்டுமில்லாமல் பச்சிளங்குழந்தை திடீர் மரணம் (SIDS)ம் ஏற்படலாம். காரணமின்றி நிகழும் மரணத்தையே SIDS என்கிறோம். குழந்தையை அருகில் வைத்திருக்கும்போது புகைப்பது, குழந்தை படுத்திருக்கும் நிலை என இதற்கான காரணங்கள் பல்வாறாக சொல்லப்படுகிறது.

லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியான விரிவான கட்டுரையில் பச்சிளங்குழந்தை திடீர் மரணத்துக்கு பசும்பால் முக்கியக் காரணம் எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. பாலில் உள்ள புரத ஒவ்வாமை காரணமாக குழந்தை திடீரென இறக்க நேரிடலாம். மேலும் எக்சிமா மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். 

வட மாவட்டங்களில் குழந்தை பிறந்தவுடன் கழுதைப்பால் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அதைக் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு குரல் வளம் செழிக்கும் என்கிற தவறான நம்பிக்கை பரவலாக இருப்பதன் விளைவு இது. இது முற்றிலும் தவறானது. கழுதைப்பால் கொடுத்ததன் விளைவாக வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகும் குழந்தைகளை இன்றைக்கும் பார்க்க முடிகிறது. அந்த மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் வெளியே வர வேண்டும். தாய்ப்பால்தான் குழந்தைக்கான உணவு என்பதனைப் புரிந்து மற்ற பால்களைத் தவிர்ப்பதன் மூலம் நலமான வாழ்வை சாத்தியப்படுத்தலாம்’’ என்கிறார் ஜெகதீசன். 

- கி.ச.திலீபன் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow