Armstrong: ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு காரணம் தான் என்ன..? தோண்டத் தோண்ட புதுப்புது ரவுடிகள்! Exclusive

Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் பகையில் இருந்த ரவுடிகளின் பட்டியலை போலீஸார் முழுமையாக தயார் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jul 18, 2024 - 18:03
Jul 19, 2024 - 10:03
 0
Armstrong: ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு காரணம் தான் என்ன..? தோண்டத் தோண்ட புதுப்புது ரவுடிகள்! Exclusive
Armstrong Murder Case

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி இரவு பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, திருநின்றவூர் பா.ஜ.க நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அருள், கோகுல், விஜய், சிவசக்தி, தமாகா இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, தி.மு.க திருவள்ளூர் மத்திய மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசன் மகன் சதீஷ் ஆகிய 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்ற சம்பவத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் வடசென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக, திமுக, பாஜக என மூன்று முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.  

குறிப்பாக, 2001ம் ஆண்டு தோட்டம் சேகர் என்பவரை ரவுடி சிவக்குமார் கொலை செய்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக தோட்டம் சேகரின் மகன்கள் 20 ஆண்டுகள் கழித்து, கடந்த 2021ல் ரவுடி சிவக்குமாரை அசோக்நகரில் வைத்து கொலை செய்தனர். கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக மட்டுமே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள திமுக வழக்கறிஞர் அருள் என்பவர், படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மைத்துனர். இதனால், அவர் தான் ஆம்ஸ்ட்ராங்கை திட்டுமிட்டு கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய இயலாது என்பதால், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் காதலியான பா.ஜ.க நிர்வாகி அஞ்சலை ஆகிய நபர்களோடு சேர்ந்து கொலை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் என போலீசர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்காக திமுக வழக்கறிஞர் அருள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பிரபல தாதாவின் மனைவியும் அதிமுக நிர்வாகியுமான வழக்கறிஞர் மலர்கொடியிடம் நாட்டு வெடிகுண்டுகள் வாங்கியுள்ளார் என்பதும் விசராணையில் தெரியவந்துள்ளது. மேலும் மலர்கொடியின் மகன் வழக்கறிஞர் அழகு ராஜா என்பவர் தற்போது கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருப்பதால் அவரின் ஜீப்பை இந்த அருளுக்கு கொடுத்து உதவியதும் தெரியவந்துள்ளது. 

மேலும், திமுக வழக்கறிஞரான அருளுக்கு திமுக நிர்வாகியின் மகனான சதீஷ் என்பவர் தனது பொலிரோ காரை கொடுத்ததும், அந்த கடந்த மூன்று மாதத்திற்கு முன்பாக அருள் சதீஷ் பெயரில் வாங்கியதும் தெரியவந்துள்ளது. சென்னையில் கொலையாளிகள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியானது. தென் சென்னையின் முக்கிய தாதாவும் A+ ரவுடியுமான சம்பவ செந்தில் என்ற சம்போ செந்திலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. 

குறிப்பாக திமுக வழக்கறிஞரான அருளுக்கு, சம்போ செந்திலை அறிமுகப்படுத்தியது ஹரிஹரன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ரவுடி சம்போ செந்தில் ரூ.4 லட்சம் ஹரிஹரனிடம் கொடுத்ததும், அந்தப் பணத்தை ஹரிஹரன் மலர்கொடி மூலமாக அருளுக்கு கொடுத்ததும் தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷுடன் தொடர்பில் இருந்த அஞ்சலையிடம், ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க பண உதவி செய்யுமாறு ஹரிஹரன் மூலமாக செந்தில் கேட்டதாகவும், அதற்கு 10 லட்சம் வரை உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. ரவுடி சம்போ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே தென்சென்னை கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களில் பலமுறை மோதல் ஏற்பட்டதும், அதனால் இருவருக்குள்ளும் பகை ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சம்போ செந்திலின் பங்கு என்ன? என்பது குறித்து விசாரிக்க சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் சதீஷின் பொலிரோ, மலர்கொடியின் மகன் அழகுராஜாவின் ஜீப், ஹரிஹரனின் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் தொடர் விசாரணையில், திருவள்ளூர் அருகே ஒரு கட்டுமான நிறுவன கட்டப்பஞ்சாயத்து நடந்தபோது, ஆற்காடு சுரேஷ், ஆம்ஸ்ட்ராங் இடையே பகை முற்றியதாகவும் தெரியவந்துள்ளது. ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பின் அவரது தம்பி பொன்னை பாலு, திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்திற்கான கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், வடசென்னையைச் சேர்ந்த தற்போது சிறையில் இருக்கும் பிரபல ரவுடி ஒருவருக்கும், ஆம்ஸ்ட்ராங்கும் இடையே சோழவரம் அருகே பலகோடி ரூபாய் மதிப்புகொண்ட கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தில் நேரடி மோதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே விவகாரத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நபர்களையும் மிரட்டி ஆம்ஸ்ட்ராங் தரப்பு கட்டப்பஞ்சாயத்து செய்ததும் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த பெரிய ரவுடிகளின் பின்னணி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்போ செந்தில் உள்ளிட்ட சென்னையின் மூன்று முக்கிய ரவுடிகளின் கடந்த கால செல்போன் உரையாடல்கள் பின்னணி குறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ஆற்காடு சுரேஷ் கொலைப் பின்ணணி குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் தொடர்பு இருப்பதாக எந்தவித அறிக்கையையும் வழங்கவில்லை. எனினும் ஆம்ஸ்ட்ராங் வழக்கின் கொலையாளிகள் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, உண்மையை அறிய, ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கை மீண்டும் விசாரித்து முறையாக அறிக்கை தர வேண்டும் என முடிக்கிவிடப்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கின் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கால் ரெக்கார்டு உள்ளிட்ட அறிவியல் ரீதியான தடயங்களை மீண்டும் ஆய்வு செய்யும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி, அப்போது பணியில் இருந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. பின்னர் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow