பட்டியலின மக்கள் முதல்வராக முடியாது; படுகொலையின் வலி பாஜகவுக்கு தெரியும் - ஏ.என்.எஸ்.பிரசாத்

அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.

Jul 11, 2024 - 14:41
 0
பட்டியலின மக்கள் முதல்வராக முடியாது; படுகொலையின் வலி பாஜகவுக்கு தெரியும் - ஏ.என்.எஸ்.பிரசாத்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஏ.என்.எஸ்.பிரசாத்

திராவிடத்தால் பட்டியலின மக்கள் முன்னேற முடியாது. திராவிட கட்சிகள் ஒரு நாளும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்காது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.என்.எஸ்.பிரசாத வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் எனது 34 ஆண்டுகால நண்பர். கட்சி வேறு, கொள்கை வேறு என இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்தாலும் எங்களின் நட்பு மாறியதே இல்லை. எப்போது பார்த்தாலும் அதே மாறாத அன்பு.

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொல்லப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் தலையில் இடி இறங்கியது போன்ற அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கு ஒரு படுகொலையின் வலி எத்தகையது என்பது மற்றவர்களை விட அதிகம் தெரியும்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைக்கு குறிப்பாக பயங்கரவாதிகளால் பாஜகவினர் தாக்கப்படுவது, கொடூரமாக கொல்லப்படுவது நடந்து வருகிறது. 

திராவிட மாடல் ஆட்சியில் தான் சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். மாநில தலைமை அலுவலகமும், சிந்தாதரிப்பேட்டையில் இந்து முன்னணி தலைமை அலுவலகமும் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இதில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பாஜக தேசியத் தலைவராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவிலூர் சுந்தரம் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது 1982ம் ஆண்டு கோவையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி இராம.கோபாலன் மதுரை ரயில் நிலையத்தில் படு பயங்கரமாக வெட்டப்பட்டு உயிர் பிழைத்தார்.

பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பாஜக மருத்துவ அணி மாநிலத் தலைவர் வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், திருச்சி மாநகர பாஜக தலைவர் டாக்டர் ஸ்ரீதர் என பயங்கரவாதத்திற்கு இரையான பாஜக, இந்து அமைப்பு நிர்வாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

முன்னாள் தணைப் பிரதமர், பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல நடத்தப்பட்ட கோவை குண்டு வெடிப்பு, தென்காசியில் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டது என பாஜகவும், இந்து அமைப்புகளும் சந்தித்த இழப்புகள் ஏராளம்.

அதனால்தான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக களத்தில் இறங்கி இந்த படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக சார்பில் முக்கிய நிர்வாகிகள் குழு டெல்லி சென்று தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளை  சந்தித்து இந்த படுகொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தியது.

இந்த இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை பெற்றால், தமிழக அரசுக்கு அழுத்தம் ஏற்படும். அதன் மூலம் உண்மை வெளிவரும் என்பதற்காக மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக குழுவினர் டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.

பட்டியல் இன மக்களின் வளர்ச்சிக்காக, அவர்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக பாரதிய ஜனதா கட்சியும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவருடைய கொலையை  கண்டித்ததோடு, சிபிஐ விசாரணை வேண்டி வலியுறுத்தியும், பட்டியல் பிரிவு மக்களுக்காக பாஜக என்றைக்கும் ஆதரவாக இருக்கும். அவர்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்து உரிமைகளை போராடி பெற்று தரும் என்று அண்ணாமலை அவர்கள் பட்டியலின மக்களுக்கு தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதியுடன் தெரிவித்தார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையால் தமிழகத்தைச் சேர்ந்த பட்டியல் பிரிவு மக்கள் திமுக அரசின் மேல் கடும் கோபம் கொண்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தமிழக பாஜக மேலும் தலைவர் அண்ணாமலை மேலும் முழு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இதன் எதிரொலியாக திமுக அரசின் தூண்டுதலின் பேரில், திமுகவின் மாவட்ட செயலாளர் போல, கொத்தடிமை தலைவராக, தன்னையும், காங்கிரஸையும் திமுக முதல்வரிடம் அடமானம் வைத்து விட்ட காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்நோக்கத்தோடு தமிழக பாஜகவையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது அவதூறாகப் பேசி வருகிறார். தமிழகத்தை புரட்டிப்போட்ட இந்த படுகொலையால் பட்டியல் பிரிவு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வை திசை திருப்ப பார்க்கிறார் என்கிற சந்தேகம் தான் எங்களுக்கு எழுகிறது.

செல்வப்பெருந்தகை அவர்களே, பொய் சொல்வதையும் மிரட்டுவதையும் திமுகவிற்கு வால் பிடிப்பதையும் நிறுத்துங்கள். திருந்துங்கள். இல்லையென்றால் திருத்தப்படுவீர்கள். கடந்த பல ஆண்டுகளாக பாஜக தலைவர்களின் தொடர் படுகொலைகளின் துயரம் தந்த வலியுடன் தான் பட்டியலின மக்களின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையை நாங்கள் பார்க்கிறோம்.

ஆம்ஸ்ட்ராங் மற்ற பட்டியலின தலைவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். திராவிடம், கம்யூனிசம், போலி மதச்சார்பின்மை சக்திகளின் சூழ்ச்சி வலைகள் அறிந்தவர். அதனால்தான் தனித்தே இயங்கினார். திராவிடத்திடம் சமரசம் செய்து கொள்ளாத பட்டியலின தலைவர் ஆம்ஸ்ட்ராங் மட்டுமே.

திராவிடத்தால் பட்டியலின மக்கள் முன்னேற முடியாது. திராவிட கட்சிகள் ஒரு நாளும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்காது. உண்மையிலேயே அரசியல் அதிகாரத்தை வழங்காது. அம்பேத்கரை கொண்டாடாத இயக்கம் திராவிட இயக்கம் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் அம்பலப்படுத்தி வந்தார்.

இதனால், அவர் இல்லை என்பதை நினைக்கும் போதெல்லாம் மனம்  பதறுகிறது. ஆம்ஸ்ட்ராங் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக மட்டுமே இருந்தவர். அவர் நினைத்திருந்தார் வேறு கட்சிகளின் சேர்ந்து எம்.எல்.ஏ., எம்.பி., ஏன் அமைச்சராக கூட ஆகியிருக்கலாம். 

பதவி ஆசையின்றி பட்டியலின மக்களுக்காக உழைத்தவர். மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பெயரை பெரம்பூர் பகுதியில் உள்ள ஒரு சாலை அல்லது தெருவுக்கு சூட்ட வேண்டும். பெரம்பூரில் அவருக்கு மணி மண்டபம் கட்டவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow