பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம்.. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்.. அன்புமணி

பாமகவை சாதி கட்சி என்பது போன்று பேசுவதை திருமாவளவன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sep 15, 2024 - 19:53
Sep 15, 2024 - 19:58
 0
பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம்.. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும்.. அன்புமணி
பாமகவை கொச்சைப்படுத்த வேண்டாம் - அன்புமணி ராமதாஸ்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாமக நிர்வாகியின் புதுமனை புகுவிழாவில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று வெறும் 7,500 கோடிக்கு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வந்துள்ளார். ஆனால் எவ்வளவு முதலீடு வரும் என்று தெரியாது.

தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று முடிந்த பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீடு என்பது 87 ஆயிரம் கோடி மட்டும் தான். இது வெறும் 9 சதவீதம் தான். அந்த அடிப்படையில் இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கு சென்று வந்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து சதவீதம் மட்டும்தான் முதலீடாக வரும். வெறும் 750 கோடி தான் முதலீடாக வரும். இந்த பயணத்தை நான் தோல்வியாக பார்க்கிறேன்.

மது ஒழிப்பு என்று சொன்னாலே தமிழ்நாட்டு அரசியலில் பாடுபடுகிற ஒரே கட்சி பாமக தான். கட்சியாக தொடங்கப்படுவதற்கு முன்னமே, பாமக பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். கோவில்பட்டியில் மது ஒழிப்பு மாநாடு நடத்திய உள்ளோம். இதுவரை மதுவை எதிர்த்து போராடி 15 ஆயிரம் பெண்கள் சிறைக்கு சென்றார்கள். பூரண மதுவிலக்கு கொள்கையை எந்த கட்சி ஏற்றுக்கொண்டால் அதற்கு காரணம் பாமக தான்.

மதுக்கடையை மூடினால் நிலைமை வேறு விதமாக மாறிவிடும் என அமைச்சர் சொல்கிறார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் மது இல்லாமல் இருக்க முடியாத ஒரு சூழலுக்கு கொண்டு வருவது தான் திராவிட மாடல். எல்லோரையும் குடிகாரர்கள் ஆக்கி இளைஞர்களை நாசப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். மூன்று தலைமுறை நாசம் ஆகிவிட்டது.

மது ஒழிப்பு மாநாடு போராட்டம் கூட்டம் யார் எந்த கட்சி நடத்தினாலும் ஆதரிப்போம். திருமாவளவன் நடத்தினாலும் சரி யார் நடத்தினாலும் சரி நாங்கள் ஆதரிப்போம். இது எங்கள் கட்சியின் மையக் கொள்கை. ஆனால் ஒன்றே ஒன்று... பாமக சாதி கட்சி என்று எங்களை இழிவுபடுத்தாதீர்கள். அப்படி என்றால் நீங்கள் என்ன கட்சி?.... ஒரு கட்சியை கொச்சைப்படுத்தக் கூடாது.

கல்வி சுகாதாரம் சுற்றுச்சூழல் சமூகநீதி மது ஒழிப்பு என பல்வேறு கொள்கைகளை வைத்து கட்சி நடத்துகிறோம். பாமகவால் பல மாற்றங்களை தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் கொண்டு வந்துள்ளோம். உங்களால் எத்தனை மாற்றங்கள் வந்துள்ளது என்று சொல்லுங்கள். ஒன்று கூட கிடையாது. அப்படிப்பட்ட பாமக கட்சியை எப்போது கொச்சைப்படுத்துவது தவறு. திருமாவளவன் நிறுத்தி கொள்ள வேண்டும். இது அன்பான வேண்டுகோள்.

2026 தேர்தலில் மட்டுமல்ல அடுத்த வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் கூட்டணி ஆட்சி தான். பள்ளிகளில் அரிவாள் கலாச்சாரம் தொடர்கிறது. நீதி போதனை வகுப்புகள் கற்றுத்தர வேண்டும்.  அரிவாள் கலாச்சாரம் மீது.கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் மீது மட்டுமின்றி பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடும் பயமும் வரும்.

2026 தேர்தலில் நிச்சயமாக திமுக ஆட்சி கிடையாது. விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் திமுக ஆட்சி மீது கோபமாக இருக்கிறார்கள். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. சட்ட ஒழுங்கு, மது, கஞ்சா, போதை பொருட்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. இதில், முதலமைச்சர் கவனம் செலுத்தி தமிழ்நாட்டு மக்களை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow