'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

Sep 22, 2024 - 11:58
 0
'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!
Fishermen Issue

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாக நடந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக நமது மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, படகுளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டக்கோரி மீனவர்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்,  மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ’எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ’’வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த  மீனவர்கள் 37 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 7-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அடுத்த இரு வாரங்களுக்குள் ஒரே நேரத்தில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 51 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.  அதுமட்டுமின்றி 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

மீனவர்களை கைது செய்வது, மீனவர்களைத் தாக்குவது, மீனவர்களின் உடமைகளைக் கொள்ளையடிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது,  அபராதம் விதிப்பது என  அனைத்து வழிகளிலும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை இலங்கை அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. அதனால், பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசின் அட்டகாசமும், அத்துமீறலும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.  இவை இனியும் தொடர  இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி  அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி,  மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழுவை அமைத்து பேச்சுகளைத் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு நேற்று தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் 50% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் குமார திசாநாயகே புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow