தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை எச்சரிக்கை!

By Sumalekha
15 Aug 2026, 03:25 PM
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 17, 18 மற்றும் 19-ம் தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. சென்னையிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் வரும் 19-ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.