தமிழ்நாடு

போலீஸ் வேடத்தில் நூதன மோசடி: உல்லாசத்திற்கு வந்தவரிடம் ரூ.45,000 பறித்த கும்பல்!

By Christon
27 Apr 2026, 12:34 PM
சென்னையில் உல்லாசத்திற்கு வந்த நபரை மிரட்டி, போலீசார்' என்று கூறிப் பணம் பறித்த பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உல்லாசத்திற்கு வந்த நபரை மிரட்டி, தாங்கள் 'பாலியல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார்' என்று கூறிப் பணம் பறித்த பெண்கள் உட்பட மூன்று பேரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவன ஆலோசகரான சுரேஷ் என்பவர், ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு உல்லாசத்திற்காகச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பெண்ணுடன் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தங்களை 'பாலியல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார்' என அறிமுகப்படுத்திக் கொண்டனர். சுரேஷை விபசார வழக்கில் கைது செய்யப்போவதாக மிரட்டிய அந்தக் கும்பல், அவரிடமிருந்து ரூ.1,000 ரொக்கம், ஜி-பே (G-Pay) மூலம் ரூ.44,000 மற்றும் அவரது செல்போனைப் பறித்துக் கொண்டு, அவரை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டுத் தப்பியோடினர்.

திடுக்கிடும் பின்னணி

பாதிக்கப்பட்ட சுரேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம் என்பது தெரியவந்தது. திவ்யா என்ற பெண் விலைமாதராக நடித்து சுரேஷை வரவழைத்துள்ளார். தென்காசியைச் சேர்ந்த தருண்ராஜ் என்பவர் இந்த கும்பலின் மூளையாகச் செயல்பட்டு, உல்லாசத்திற்கு வரும் ஆண்களைக் குறிவைத்து இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். இவர்களுக்கு உடந்தையாகத் திலகா என்ற மூதாட்டி தனது வீட்டை வழங்கியதும் விசாரணையில் அம்பலமானது.

மூன்று பேர் கைது; இருவருக்கு வலை

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிரகாஷ், சசிகலா மற்றும் சரளா ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கும்பலுக்குத் தலைவனாகச் செயல்பட்ட தருண்ராஜ் மற்றும் அவருக்கு உதவிய திவ்யா ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தற்போது தென்காசிக்கு விரைந்துள்ளனர்.