வருகின்ற 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தற்போது சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக மற்றும் CJP இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருவது புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் CJP-க்கு அதிகரித்து வரும் ஆதரவு, திமுகவுக்கு சாதகமான அரசியல் நகர்வாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து CJP நடத்தியதாகக் கூறப்படும் போராட்டங்கள் அக்கட்சிக்கு தேசிய அளவில் கவனம் பெற்றுத் தந்துள்ளதாக அதன் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினும், கேரளாவில் பினராயி விஜயன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்களில் முக்கியமானவர்கள் என்று 'கரோச் ஜனதா கட்சி' (CJP) தலைவர் அபிஜித் தீப்கே (Abhijeet Dipke) தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
திமுக - CJP கூட்டணி?
நீட் விவகாரத்தில் CJP முன்னெடுத்த போராட்டங்களுக்கு திமுக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் நெருக்கம் குறித்த பேச்சுகள் அதிகரித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, கேரளத்தில் CPM மற்றும் டெல்லியில் ஆம்தமி(AAP) ஆகியோருடன் CJP கூட்டணி உருவாகலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. எனினும், இதுகுறித்து இரு கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
காங்கிரஸுக்கு மாற்றாக 3வது அணி?
தேசிய அரசியலிலும் CJP தலைமையில் புதிய அரசியல் அணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் மாற்றாக பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்துள்ளன.
சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், BRS உள்ளிட்ட பிராந்திய கட்சிகளுடன் இணைந்து புதிய அரசியல் அணியை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4 முனைப் போட்டி?
திமுக - CJP கூட்டணி உருவானால், தமிழக தேர்தல் களம் மேலும் சுவாரஸ்யமடையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது,
அதிமுக - பாஜக கூட்டணி
நாம் தமிழர் கட்சி
தவெக - காங்கிரஸ் கூட்டணி
திமுக - CJP கூட்டணி
என நான்கு முனைப் போட்டி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தவெகவின் இளைஞர் வாக்கு வங்கிக்கு போட்டியா?
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் நிலையில், CJP-யின் அரசியல் எழுச்சி தவெகவுக்கு போட்டியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் CJPக்கு உருவாகும் ஆதரவை திமுகவுடன் இணைக்கும் பட்சத்தில், அது தவெகவின் எதிர்கால தேர்தல் கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கணக்குகள் மிகப்பெரிய அளவில் மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், திமுக - CJP கூட்டணி குறித்த இறுதி முடிவு மற்றும் பிற கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் தெளிவாகும் வரை, தற்போதைய தகவல்கள் அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவும் பேச்சாகவே பார்க்கப்படுகின்றன.