'என்னதான் உட்கட்சி பூசல் என்றாலும் இந்த நேரத்திலுமா?” என புலம்புகிறார்கள் தூத்துக்குடி தி.மு.க.வினர். "அவதூறு வழக்கில் கைது செய்து, அனிதா ராதாகிருஷ்ணனை ஒரு நாள் முழுக்க போலீஸ் அலைக்கழித்தபோது, ஓடிவந்து நிற்கவேண்டிய கீதாஜீவன், கடைசிவரை பாராமுகமாக இருந்துவிட்டாரே” என்பதுதான் அம்மாவட்ட உடன்பிறப்புகளின் ஆதங்கம்!
இதுகுறித்து, தூத்துக்குடி தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ஆட்சியில் இருந்தபோது பரபரப்பாக அரசியல் செய்த தி.முக. மூத்த நிர்வாகிகள் பலரும் ஆட்சி மாறியதும் தியான நிலைக்கு சென்றுவிட்டனர். ஆனால், ஆட்சி நடந்த ஐந்து வருட காலமும் அமைதியாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், தற்போது அனல் பறக்க அரசியல் செய்துவருகிறார். அதனால் தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார். இப்படி 70 வயதிலும் பரபரப்பாக அரசியல் செய்யும் அவரை முடக்க நினைத்தது த.வெ.க. அரசு.
அதற்கு தோதாக, 'முதல்வர் விஜய்யை, அனிதா அவதூறாகப் பேசினார்' எனக் கூறி தவெ.கவினர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அவசரமாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த போலீஸார், அனிதாவை கடந்த ஜூலை 3ம் தேதி கைது செய்து அன்றைய நாள் முழுக்க அவரை, ஆத்தூர் காவல் நிலையம், தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை என கிட்டத்தட்ட 10 மணி நேரம் அலைக்கழித்தனர். எஸ்.பி. ஆபிஸில் மட்டுமே விசாரணை என்கிற பெயரில் ஆறு மணி நேரம் சிறை வைத்த மாதிரி அங்கேயே உட்காரவைக்கப்பட்டார். அவரைப் பார்க்க வக்கீல்களைக்கூட அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதற்கிடையே, அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பானதும் ஏராளமான தி.மு.க.வினர் எஸ்.பி. அலுவலகத்தில் குவிந்தனர். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவரின் ஆதரவாளர்களுடன் வந்தார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தென்காசி மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன், நெல்லை மாநகரச் செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான வஹாப் ஆகியோர் உடனே எஸ்.பி அலுவலகம் வந்துவிட்டனர். போலீஸாரைக் கண்டித்து கோஷம் போட்ட சிவ பத்மநாபன் கைதும் செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணன் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மூன்று மணி நேரம் காக்க வைத்தபோது அங்கேயும் தி.மு.க.வினர் ஏராளமான பேர் குவிந்திருந்தனர்.
ஆனால், இங்கு எங்குமே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் வரவே இல்லை, கேட்டால் அவர் சென்னையில் இருக்கிறார் என்று சொல்லிவிட்டனர். தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். அவரும் வரவில்லை. கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதியும் வரவில்லை. இவர்கள் இருவரும் கீதாஜீவனின் தீவிர ஆதரவாளர்கள்.
அ.தி.மு.க.வை சின்னாபின்னமாக்கும் வேலையில் இறங்கியிருக்கும் தவெக, திமுகவையும் ஒரு கை பார்க்கத் துணிந்துவிட்டது. ஒரு பக்கம் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசியதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியையும் அவரின் சகோதரரையும் கைது செய்ய துடிக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையிட்டு அவரை முடக்க நினைக்கிறார்கள். இப்படி சோதனையான ஒரு காலகட்டத்தில் கட்சி இருக்கிறது. அனைவரும் பழைய பகையை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.
இரண்டு மாத காலத்திலேயே த.வெ.க.வினர் ஆய்வு என்கிற பெயரில் அட்ராசிட்டி செய்துவருகிறார்கள். அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் கெட்ட பெயரை சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதனால் த.வெ.க.வுக்கு ஓட்டு போட்ட மக்கள் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தால் நம்மை மற்றவர்கள் வீழ்த்திவிடுவார்கள். அந்த வகையில் கீதாஜீவன் செய்தது மிகப்பெரிய தவறு. அவர் ஊரில் இல்லையென்றாலும் தன் ஆதரவாளர்களை அனுப்பியிருக்க வேண்டும். இதையெல்லாம் கட்சித் தலைமை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்கள் ஆதங்கத்துடன்.
இதற்கு கீதாஜீவன் என்ன சொல்கிறார்? அவரிடமே கேட்டோம். அன்று நான் சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் இருந்தேன். எனவே என்னால் அங்கு செல்ல முடியவில்லை. ஆனால், அவரிடம் பேசி விசாரித்தேன். மற்றபடி யாரையும் போகவேண்டாம் என்று நான் சொல்லவில்லை.
மாநகரச் செயலாளர் ஏன் போகவில்லை என்று எனக்குத் தெரியாது. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடே கண்டித்தது. எனவே, நான் போகவில்லை என்று இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்றார். கீதாஜீவனின் ஆதரவாளர்களோ, "சில நாட்களுக்கு முன்பு த.வெ.க. அமைச்சர் சரத்குமாரின் 'பவுடர்' விவகாரத்தைக் கண்டித்து, தி.மு.க. மாணவரணி சார்பில் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அன்றைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் ஊரில்தான் இருந்தார். அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லையே. அதைபோல் இதையும் அவர்கள் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்றார்கள் கூலாக. அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களோ, "ஒரு சம்பவம் நடக்கும்போது எல்லோரும் வரவேண்டும் என்று நினைப்பது தவறு. கீதாஜீவன் வரவில்லை என்று அண்ணாச்சியும் வருத்தப்படவில்லை.
இரவு 12 மணிக்கு தலைவர் ஸ்டாலின் போன் செய்து அண்ணாச்சியுடன் பேசினார். அதுவே போதும் என்று நினைக்கிறார்" என்றார்கள்.ஆளும்கட்சி வேட்டைக்கு தூபம் போடுகிறார்களா?