சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கைது..

Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருநாதன் உதவி ஆய்வாளரை மிரட்டிய மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jul 26, 2024 - 19:56
Jul 27, 2024 - 10:06
 0
சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கைது..
Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case

Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை என மொத்தம் 16 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம், தப்பிச் செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அதன் பின்னர், தலைமறைவாக இருந்த வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் கள்ளக்காதலியும், பெண் ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலையை கைது செய்தனர். தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார்.

நேற்று ஜூலை 25ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் சிவா மூலம் கொலைக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சிவா வீட்டில் இருந்து ரூ. 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். அதேபோல், பிரபல ரவுடி சம்போ செந்திலை (Sambo Senthil) போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், திருவான்மியூர் போலீசார் சம்போ செந்திலின் கூட்டாளியை கைது செய்துள்ளனர்.

திருவான்மியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழன்பன் தலைமையிலான போலீசார், ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான, திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுருநாதனை தேடி வந்தனர். இதற்கிடையில், உதவி ஆய்வாளர் தமிழன்பன் செல்போன் எண்ணிற்கு கடந்த 22ஆம் தேதி ஒருவர் பேசி உள்ளார்.

தான் வழக்கறிஞர் சிவகுருநாதன் என்றும் தன் மீது வழக்கு ஏதேனும் பதிவு செய்தால் ஜாமினில் வந்து கொலை செய்வதாக ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தமிழன்பன் புகார் அளித்தார். போலீசார் வழக்கறிஞர் சிவகுருநாதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கறிஞர் சிவகுருநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒப்பந்ததாரர் கார்த்திக் என்பவரை மிரட்டி ரூ.20 லட்சம் மாமூல் கேட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தான் சிவ குருநாதனை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட மற்றொரு வழக்கில் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow