'கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்' - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி மனைவி புலம்பல்

Armstrong Murder Case : எனக்கும் என் குடும்பத்தாருக்கும் திருவேங்கடம் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Jul 18, 2024 - 21:59
Jul 19, 2024 - 10:03
 0
'கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்' - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி மனைவி புலம்பல்
கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருள் மனைவி மற்றும் ஆம்ஸ்ட்ராங்

கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தனது கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள், அவரது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வழக்கறிஞர் அருள் மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார்.

Armstrong Murder Case : பெரம்பூரில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டருகே படுகொலை(Armstrong Murder) செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், வழக்கறிஞர் அருள், திருமலை என மொத்தம் 11 நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்தாண்டு பட்டினப்பாக்கத்தில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்ததாக 11 நபர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இவர்களை சிறையில் அடைத்த நிலையில், கடந்த பதினோராம் தேதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கருதப்படும் திருவேங்கடம் ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த தகவலின் பெயரில், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு கொண்டு செல்லும்போது தப்பி செல்ல முற்பட்டதால் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று புதன்கிழமை மேலும் மூன்று பேரை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரஹரன், சதீஷ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் ஆற்காடு இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு சுரேஷின் கள்ளக்காதலியும், பெண் ரவுடியுமான புளியந்தோப்பு அஞ்சலையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல், பிரபல ரவுடி சம்போ செந்திலை (Sambo Senthil) போலீசார் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் ஆகியோரிடம் செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையில் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தொடர்ந்து சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநின்றவூரை சேர்ந்த அருள் என்பவர் மனைவி அபிராமி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “இந்த வழக்கில் சம்பந்தம் இருந்தால் அவரை சட்டப்படி நீதிமன்றம் அவரை தண்டிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சபனையும் இல்லை. ஆனால், போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்ட என் கணவருடன் கைதான நபர் திருவேங்கடம் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நான் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். இந்த நிலையில் என் கணவர் அருள் அவர்களை மீண்டும் போலீஸ் கஸ்டடியில் எடுக்க இருப்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் பொழுது தப்பி ஓட முயற்சி செய்தார் என்று என் கணவரை என்கவுன்ட்டர் முறையில் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்று மிகவும் அச்சமாக உள்ளது.

என் கணவரை விசாரிக்கும் பொழுது கை மற்றும் கால்களுக்கு விலங்கு பூட்டி, அவர் விசாரணை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறும் விசாரணை முடிந்து அவரை நல்ல முறையில் மீண்டும் நீதிமன்ற காவலில் ஒப்படைக்குமாறும் உங்கள் பாதம் பணிந்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை முடியும் வரை என் கணவர் அருள் அவர்கள் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆவடி காவல் ஆணையரகம், விசாரணை இங்கு நடைபெறவில்லை என கூறி இந்த புகாரை சென்னை காவல் ஆணையரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow