தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமனம்!

புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

Aug 19, 2024 - 07:15
Aug 19, 2024 - 10:41
 0
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமனம்!
Muruganantham IAS

சென்னை: தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு கடந்தாண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது அவரை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

சிவ்தாஸ் மீனாவின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். ஜெய்ப்பூரில் உள்ள கல்லூரியில் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவர் மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று 1989ம் ஆண்டு முதன்முறையாக தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக தனது பணியை தொடங்கினார்.

காஞ்சீபுரம் உதவி கலெக்டராக (பயிற்சி) பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா. கோயம்புத்தூர் உதவி ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியராக பதவி வகித்தார். பின்பு 1998ம் ஆண்டு நாகப்பட்டின மாவட்ட ஆட்சியராகப் பதவியேற்றார். மேலும் மருத்துவப் பணிகள் இயக்குநர், வேளாண் துறை ஆணையர், வணிகவரித் துறை ஆணையர், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும நிர்வாக இயக்குநர், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட முக்கியத்துறைகளின் பொறுப்புகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

2011ம் ஆண்டு சிறப்புத் திட்டச் செயலாக்க துறையின் செயலாளராகப் பணியாற்றிய சிவ்தாஸ் மீனா,  பொதுத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். பின்பு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராக சிறிது காலம் இருந்தார். அதன்பின்பு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவ்தாஸ் மீனா விரைவில் ஓய்வு பெற உள்ளதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினா விழா அன்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவை முன்பு வந்து நிற்க சொல்லி அவரது பதவிக்கு மரியாதை கொடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சிவ்தாஸ் மீனாவின் மாற்றத்தை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  புதிய தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow