கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. திருமாவளவனின் லேட் ரியாக்சன்.. சொன்னது என்ன?

''திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக எந்த சிக்கலும் எழவில்லை. இனி எழவும் வாய்ப்பில்லை'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Sep 25, 2024 - 17:28
 0
கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. திருமாவளவனின் லேட் ரியாக்சன்.. சொன்னது என்ன?
Aadhav Arjuna And Thirumavalavan

சென்னை: விசிக துணை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜூனா. சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இவர் திமுகவை மிக கடுமையாக விமர்சித்து இருந்தார். அதாவது வடமாவட்டங்களில் விசிக துணையின்றி திமுகவால் ஜெயிக்க முடியாது என்று கூறிய அவர் ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாடுயு பெருந்தன்மையுடன் கூட்டணி கட்சிக்கு துணை முதல்வர் பதவியை (ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வர்) வழங்கியுள்ளார். இதேபோல் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என பேசியிருந்தார்.

மேலும் நேற்று சினிமாவில் இருந்து வந்தவர்கள் எல்லாம் துணை முதல்வராகும்போது, எனது தலைவர் (திருமாவளவன்) ஏன் துணை முதல்வர் ஆக முடியாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது எனவும் உதயநிதி ஸ்டாலினையும் அவர் விமர்சித்து இருந்தார். ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சால் திமுகவினர் கொதித்தெழுந்தனர்.  அத்துடன் ஆதவ் அர்ஜூனாவுக்கு திமுக எம்.பி.யும், துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா பதிலடி கொடுத்திருந்தார்.

‘’மதவாதத்தை ஒழித்து சமூக நீதியைக் காப்பதில் திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக. அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர் கொள்கைப் புரிதல் இன்றி பேசியிருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல. கூட்டணிக்கும் நல்லதல்ல; இதை திருமாவளவனும் ஏற்றுக் கொள்ள மாட்டார்’’ என்று ஆ.ராசா கூறியிருந்தார். திமுக மட்டுமின்றி விசிகவினரும் ஆதவ் அர்ஜூனாவின் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 

விசிகவின் மூத்த தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக பேசிய விசிக எம்.பி ரவிக்குமார், ‘’ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைக்கு மாறானது மற்றும் அரசியல் முதிர்ச்சியற்றது. திமுக-விசிக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் இல்லாமல், கொள்கையை அடிப்படையாக கொண்டது’’என்று கூறியிருந்தார்.

மேலும் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ‘’ஆதவ் அர்ஜூனாவின் கருத்தில் நாங்கள் உடன்படவில்லை. தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். விசிகவின் வெற்றிக்கு திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் காரணம்’’ என்று பேசியிருந்தார்.

விசிகவின் சீனியர்கள் பலர் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்து விட்டாலும், இதில் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்து என்ன? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில்,  ஆதவ் அர்ஜூனா விவகாரம் தொடர்பாக திருமாவளவன் முதன்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். அதாவது சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த திருமாவளவனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு பதில் அளித்த அவர், ‘’திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக எந்த சிக்கலும் எழவில்லை. இனி எழவும் வாய்ப்பில்லை. 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமின்றி 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு, கட்சி நலன், கூட்டணி நலன் மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு விசிக முடிவெடுக்கும்’’ என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘’விசிக-திமுக இடையிலான நல்லுறவு, கூட்டணி உறவு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. நகர்ந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த நெருடலும் இல்லை, கட்சி, கூட்டணி ஆகியவற்றிற்கு எந்த சேதமும் இல்லாமல் முடிவெடுக்க கூடிய பொறுப்பு தலைமை என்கிற முறையில் எனக்கு உள்ளது.

ஒவ்வொரு தனி நபருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை உண்டு. சுதந்திரம் உண்டு. எல்லா கட்சிகளிலும் தனிநபர் அவரவர் கருத்துக்களை சொன்னாலும் இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும். ஆதவ் அர்ஜுனாவும் கூட்டணி தொடர்பான முடிவை தலைமை எடுக்கும்; அதில் நான் தலையிட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக கட்சியின் முன்னணி தலைவர்களுடன் பேசினேன். அவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்’’ என்று தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow