RS Bharathi: “நாய் கூட BA பட்டம் வாங்குது..” டிவிட்டரில் ஆதாரத்துடன் வந்த ஆர்.எஸ் பாரதி!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

Jul 4, 2024 - 16:46
 0
RS Bharathi: “நாய் கூட BA பட்டம் வாங்குது..” டிவிட்டரில் ஆதாரத்துடன் வந்த ஆர்.எஸ் பாரதி!
ஆர்.எஸ் பாரதி விளக்கம்

சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன அரசியல்வாதிகளில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியும் ஒருவர். நேற்றைய தினம் திமுக சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. திமுக மாணவர்கள் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்றிருந்த ஆர்.எஸ் பாரதி, “நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் அந்த ஊரிலேயே ஒரேயொரு பி.ஏ.தான் இருக்கும். ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்” என பேசியிருந்தார். 

அதற்கு முன்பாக “நான் ஒரு வக்கீல். எழிலரசன் பி.இ., பி.எல்., இவையெல்லாம் எங்களுக்கு குலப் பெருமையால், கோத்திரப் பெருமையால் வந்தததா? இந்த இயக்கம் போட்ட பிச்சை என்பதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது” எனவும் கூறியிருந்தார். ஆர்.எஸ் பாரதியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேபோல் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் ஆர்.எஸ் பாரதிக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். ஆர்.எஸ் பாரதி தொடர்ந்து இதுபோன்று சர்ச்சையாக பேசி வருவதாகவும், அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நெட்டிசன்கள் பலர் கோரிக்கை வைத்தனர். 

இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சு பற்றி ஆர்.எஸ் பாரதி தனது டிவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "குலப்பெருமையால், கோத்திரப்பெருமையால் நாம் டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகிவிடவில்லை. நாங்களெல்லாம் படித்திருக்கிறோம் என்றால், இது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. நாங்கள் படிக்கும்போது, யாரேனும் பி.ஏ பட்டம் பெற்றால், உடனே பெயருக்கு பின்னால் பி.ஏ., எனக் குறிப்பிட்டு போர்டு போட்டுக்கொள்வார்கள். இப்போது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது." 

நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.“சனாதனம் படிக்க விடவில்லை. கோத்திரமும், குலப் பெருமையும் படிக்க வைக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தினர் படிக்கவிடவில்லை. நாங்கள் படித்திருக்கும் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை”என்று தன்னை முன்னிறுத்திப் பேசினார் ஆர்.எஸ்.பாரதி. வழக்கம்போல் அவருடைய பேச்சைத் திரித்து சர்ச்சையாக்க ஊடகங்கள் முயல்கின்றன. அதில் இன்னொரு வரியைப் பிடித்துக்கொண்டு இப்போது தலைப்பில் போடுகிறார்கள்.“இப்போது நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது” என்று சொல்லிவிட்டார் என்கிறார்கள். தன்னையொத்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் வளர்ச்சியை இப்படிச் சொல்லும் நோக்கம் அவருக்கில்லை என்பதைத் திராவிட இயக்கத்தை உளப்பூர்வமாகப் புரிந்தவர்கள் அறிவார்கள்.

ஆனால், உண்மையிலேயே அவர் சொன்ன செய்தி நடந்த ஒன்று தானே! நாய் டிகிரி வாங்கிய செய்தியை இவர்கள் படித்தார்களா, இல்லையா? கடந்த ஆண்டு ஊடகங்களில் வந்த செய்தி தானே இது! அமெரிக்காவில் ஜஸ்டின் என்ற நாய் டிப்ளோமோ வாங்கியதே! அது ஒரு செய்தி. என எக்கனாமிக் டைம்ஸ் இணைய ஊடகத்தில் வந்த செய்தியை பகிர்ந்துள்ளார். மேலும், இதுபோல ஏராளமான நிகழ்வுகள் மேற்குலகில் உண்டு. போகிற போக்கில் அதை நகைச்சுவையாக சுட்டிக் காட்டிவிட்டுப் போகிறார். ஊடகங்கள் அதைப் பிடித்துக்கொண்டு அவர் சொல்ல வந்த ஆதிக்க எதிர்ப்புச் செய்தியை, கோபத்தைப் பின்னுக்குத் தள்ளி திரிக்கின்றன. அவர் பேச வந்தது கல்வியை இழிவுபடுத்தவா? "ஊரில் அத்தனைப் பேரும் ஏதேனும் ஒரு பட்டத்தை படித்து பெற்றிருக்கிறார்கள். இந்த வளர்ச்சியை அழிக்கதான் இந்த நீட் தேர்வு வந்திருக்கிறது." என்று நீட் தேர்வையும், இத்தனைக் காலம் நம்மைப் படிக்கவிடாமல் செய்த ஆரியத்தை எதிர்த்துப் பேசுவதைத் திரித்து ஊடகங்கள் வெளியிடுவது அயோக்கியத்தனம் ஆகும் என பதிவிடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும், திராவிட இயக்கங்களால் எல்லோரும் கல்வி பெற்றார்கள் என்ற வரை மிகசரி.. அவர் சொன்ன விதம் ஆணவத்தின் உச்சம்.. சுயமரியாதை உள்ளவன் எவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவருக்கு இதே வழக்கம். மன்னிப்பு கேட்டுவிட்டு ஓய்வெடுப்பது மரியாதை என விமர்சித்து வருகின்றனர். அதேபோல், பேசும் போது நிதானம் இல்லாமல் பேசிவிட்டு இப்போது அதற்கு மன்னிப்பும் கேட்காமல் ஆர்.எஸ் பாரதி மக்களை ஏமாற்றி வருகிறார் எனவும் கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow