“மதிமுக, இந்தியா கூட்டணி சார்பில் பேசவில்லை” நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த துரை வைகோ கன்னி பேச்சு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், மக்களவை உறுப்பினராக முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளார் துரை வைகோ. மக்களவையில் அவரது கன்னி பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Jul 3, 2024 - 18:20
 0
“மதிமுக, இந்தியா கூட்டணி சார்பில் பேசவில்லை” நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்த்த துரை வைகோ கன்னி பேச்சு
துரை வைகோ நாடாளுமன்ற உரை

டெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைத் தேர்தல் கடந்த ஜூன் 24ம் தேதி கூடியது. ஜூன் 25ம் தேதி திருச்சி தொகுதியில் வெற்றிப் பெற்ற துரை வைகோ, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் துரை வைகோ உரையாற்றினார். முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட அவரது கன்னிப் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் முக்கியமான ஐந்து மட்டும் கவனப்படுத்த விரும்புவதாக தொடங்கினார்.

அதன்படி, முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக பேசினார். பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை, HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைத்தார். இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும் வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலை குறித்தும் பேசினார். 

இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நமது மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதனையடுத்து மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் என குறிப்பிட்டார் துரை வைகோ. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு, மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு 7000 கோடி தேவைப்படும் நிலையில், தமிழக அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது. எவ்வாறாயினும் தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தை தொடங்கவும், நிதி அளிக்கவும் ஒன்றிய அரசு முன்வரும் என நம்புவதாக தெரிவித்தார். இதனால் ஐந்து மாநிலங்களின் வறட்சி பாதித்த பகுதிகள் குறிப்பாக, தனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் பயனடையும் என்றார். அதேபோல், தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள் எனவும், ஆகவே, தேவையான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என்றும் துரை வைகோ கோரிக்கை வைத்தார்.

மேலும், ஒன்றிய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெய்யிலிலும் மழையிலும் பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. விவசாயிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்றுத்தரவும், விவசாயிகளுக்கு நிலையான சூழலை உருவாக்கவும் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அவர்களின் போராட்டங்களை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளவில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தினார். 

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் உட்பட இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருத்தம் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா 2022-க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் துரை வைகோ வலியுறுத்தினார். அதேபோல், நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி அதனை முழுமையாக தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

முக்கியமாக நான் மதிமுக சார்பிலோ, இந்தியா கூட்டணி சார்பிலோ, எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை. ஆனால் நான், சாமானியர்களின், விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் சார்பாக பேசுகிறேன். அரசியல் எல்லைகள், சித்தாந்தங்களை தாண்டி சாதாரண மக்களுக்கு சேவை செய்வோம். அவர்களை அரவணைப்போம் என இந்த அவையின் முன்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார். முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய துரை வைகோவுக்கு இந்தியா கூட்டணி உறுதிப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow