இங்கிலாந்து அபார ஆட்டம்.. சொதப்பிய இலங்கை.. தொடரை பறிகொடுக்குமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Aug 31, 2024 - 07:51
Aug 31, 2024 - 07:57
 0
இங்கிலாந்து அபார ஆட்டம்.. சொதப்பிய இலங்கை.. தொடரை பறிகொடுக்குமா?
உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்கள்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி லார்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங் தேர்வு செய்ததை அடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்தது. கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மாத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முன்னதாக, அனுபவ வீரர் ஜோ ரூட் 162 பந்துகளில் தனது 33ஆவது சதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் அலஸ்டைர் குக்-இன் சாதனையை சமன் செய்தார். மேலும், சர்வதேச அளவில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தை பிடித்தார்.

இந்நிலையில், இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 427 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அட்டகாசமாக ஆடிய கஸ் அட்கின்ஸன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 115 பந்துகளில் [14 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 118 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளையும், லஹிரு குமாரா, மிலன் ரத்நாயகே, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணி, தொடக்க ஆட்டக்காரர்கள் மோசமான ஆடினர். நிஷன் மதுஷ்கா 7 ரன்களிலும், திமுத் கருணரத்னே 7 ரன்களிலும், பதும் நிசங்கா 12 ரன்களிலும், ஆஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களிலும், தனஞ்செய டி சில்வா 0 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 23 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற 118 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

இந்த மோசமான ஆட்டத்திற்கு மத்தியில், கமிந்து மெண்டிஸ் மட்டும் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை, சிறப்பாக எதிர்கொண்டு 74 ரன்கள் எடுத்தார். இதனால், இலங்கை ஓரளவு கவுரமான ஸ்கோரை எட்ட உதவியது. ஆனாலும், அடுத்தடுத்த களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதை அடுத்து, இலங்கை அணி 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ போட்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து, 231 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்தது.

தற்போது வரை இங்கிலாந்து அணி 256 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கை அணி கடினமான இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow