யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

''காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?''

Jul 14, 2024 - 13:07
Jul 15, 2024 - 10:41
 0
யாரை காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்... சந்தேகம் எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami On Rowdy Thiruvenkadam Encounter

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பே நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் இன்று காலை போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அதாவது கைது செய்யப்பட்ட அனைவரிடமும்  பரங்கிமலை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது திருவேங்கடம், ஆயுதங்களை மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கொடுங்கையூர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான போலீசார் அவரை மாதவரம் பகுதிக்கு அழைத்து சென்றனர். 

ஆடுதொட்டி அருகே திருவேங்கடம் போலீசாருக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை தேடியபோது புழல் பகுதியில் உள்ள வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள காலி இடத்தில் தகர கொட்டாயில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து காலை 7 மணியளவில் அவரை சுற்றி வளைத்த போது திடீரென அந்த தகரக் கொட்டாயில் பதிக்க வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து ஆய்வாளர் முகமது புகாரியை நோக்கி திருவேங்கடம் சுட்டுள்ளார். இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு மற்றும் இடது பக்க மார்பில் இரண்டு முறை சுட்டதாகவும், இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

பின்பு திருவேங்கடத்தை உடனடியாக போலீசார் மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீசார் கூறியுள்ளனர். பின்னர்  திருவேங்கடம் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக புழல் போலீசார் ஆயுதம் பயன்படுத்துதல், தாக்க முற்படுதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாதவரம் பகுதியில் அவர் போலீசில் இருந்து தப்பியதால், மாதவரம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது? கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டுதான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர்? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது. 

இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை சிபிஐக்கு மாற்றவேண்டும்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow