உலகம்

இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 31 பேர் உயிரிழப்பு!

By Christon
27 Nov 2025, 03:29 PM
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இலங்கையில் கடந்த 11 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொடர் மழையால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு மற்றும் பாதிப்பு விவரங்கள்

இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, நிலச்சரிவுகள் காரணமாக மத்திய மலைப் பகுதிகளில் மட்டும் 18 மரணங்கள் பதிவாகியுள்ளன. மொத்தமாக இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கும்புக்கனா பகுதியில் வெள்ள நீர் உயர்ந்தபோது, ஒரு பயணிகள் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவசர காலக் குழுக்கள் உடனடியாகச் செயல்பட்டு, பேருந்தில் இருந்த 23 பயணிகளையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வானிலை எச்சரிக்கை

இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதையடுத்து, அதிபர் அநுர குமார திசாநாயக்க உடனடியாக அதிகாரிகளுடன் அவரை ஆலோசனை நடத்தினார். இலங்கையின் வானிலை ஆய்வு மையத்தின்படி, தீவின் தென்கிழக்கு எல்லையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது தற்போது மட்டக்களப்பில் இருந்து 210 கி.மீ தொலைவில் தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஆழ்காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், தீவின் பல பகுதிகளில் அதி கனமழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.