தமிழ்நாடு

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

By Christon
08 Jul 2025, 02:30 AM
OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் OLA நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியை சேர்ந்த மனோ (29 ) மற்றும் காரப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ் (40) ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 56 நபர்களிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

மேலும் இந்த இருவரும் OLA நிறுவனத்தின் பெயரில் போலியான பணி ஆணையை தயார் செய்து 56 நபரிடம் கொடுத்துள்ளனர். இதனை நம்பிய அனைவரும் அந்த நிறுவனத்துக்கு நேரில் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அந்தப் பணி அணையை நாங்கள் தரவில்லை என நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் இந்த இரண்டு நபர்களை நைசாக பேசி திருப்பத்தூருக்கு வரவைத்துள்ளனர்.

இதனையடுத்து, திருப்பத்தூர் வந்த இருவரையும் அவர்கள் பிடித்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் இருவர் மீதும் மோசடி புகார் அளித்தனர்.

அதன்பின்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் கந்திலி போலீசார், மோசடியில் ஈடுபட்ட மனோ மற்றும் சதீஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் சிறையில் அடைத்தனர்.

56 நபர்களிடம் OLA நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக போலி பணி அணை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.