தமிழ்நாடு

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

By Christon
03 Nov 2025, 10:48 AM
கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை மூன்று இளைஞர்கள் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

நேற்று (நவ. 2) இரவு 11 மணி அளவில், கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மூன்று இளைஞர்கள் கொண்ட கும்பல், மாணவியின் ஆண் நண்பரைத் தாக்கியது. தாக்குதலில் பலத்த காயமடைந்த நண்பர், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிப்பதற்குள், அந்த மூன்று இளைஞர்களும் மாணவியைத் தூக்கிச் சென்றனர்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

மாணவியைக் கடத்திச் சென்ற மூன்று பேரும், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அந்தப் பகுதியிலேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நிர்வாண நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த மாணவியின் ஆண் நண்பர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார், உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய அந்த மூன்று இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.