தமிழகத்தில் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் தற்போது ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 155 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் உருவாகும் 21-வது புயல் என்ற சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
ஜனவரி 9ஆம் தேதி அன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிகக் கனமழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழையும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் ஜனவரி 10ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.