தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை பெற்று வெற்றி தட்டிச் சென்றது. தமிழ்நாட்டின் அரசியலை பொறுத்தவரைக்கும் அதிமுக, திமுக என்று இருமுனைப் போட்டி நிலவி வந்த சூழலில் புதிதாக கட்சி தொடங்கி இந்த வரலாற்றினை உடைத்து தனிப்பெரும் கட்சியாக போட்டியிட்டு வெற்றியைப் பெற்றது தவெக கட்சி.
ஒரு பக்கம் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போது காங்கிரஸ்,விசிக, 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து மே 10 ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று கொண்டார்.
தற்போது தமிழ்நாட்டில் சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஆட்சி அமைந்து முதல் நிதிநிலை அறிக்கையும் வேளாண் அறிக்கையும் தாக்கல் செய்து விவாதங்கள் நடைபெற்றும் வரும் சூழலில் , விஜய்க்கு ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இதனை அக்கட்சியில் உள்ளவர்கள் வெற்றியை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்நிலையில் 2029 ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது மக்களின் பிரதமர் தேர்வாக யார் இருப்பார்? என்று இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், நரேந்திர மோடி 48.7 சதவீதம், ராகுல் காந்தி 27.1 சதவீதம், ஜோசப் விஜய் 9.2 சதவீதம், என முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி (2 சதவீதம்), சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (1.7 சதவீதம்), கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கே (1.3 சதவீதம்), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் (1.2 சதவீதம்) ஆகியோரை விட விஜய் முன்னிலையில் இருக்கிறார். இதனால் கருத்துக்கணிப்பின்படி, அதிக சதவீத ஆதரவுடன் பிரதமராக மோடி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி 2-வது இடத்தில் உள்ளார். தேசிய அளவிலான 3-வது இடத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் உள்ளார்.
சமீப நாட்களாக அடுத்த பிரதமர் முதலமைச்சர் விஜய் என த.வெ.க.வினர் பேசி வருவது, த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என தெரிகிறது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் இருக்கின்றனர் என விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று உறுதியாக கூறினார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் முதலமைச்சர் விஜய்யை வாழ்த்தி, அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த போஸ்டரில், 'இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்' என்றும், தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க. என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டசபையில், தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் கடந்த 18-ந்தேதி பேசும்போது, தமிழக முதலமைச்சர் விஜய்யின் பணிகளை பாராட்டி பேசினார். அடுத்த பிரதமராக நீங்கள் வருவீர்கள். பகலிரவு பார்க்காமல் உழைத்து வருகிறீர்கள். அதனால், நிச்சயம் நீங்கள் அடுத்த பிரதமராக வருவீர்கள் என்றார்.
அதற்கு ஒரு நாள் முன்பு பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போது, வருங்காலத்தில் தெற்கில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும். அந்த தலைவர் தமிழ்நாட்டிலிருந்து வரவேண்டும் என்று கூறினார். அந்த தலைவர் ஒவ்வோர் இந்தியரையும் பிரதிபலிப்பதுடன், ஒவ்வோர் இந்தியரையும் சம அளவில் நடத்துவார் என்று கூறினார்.
தென்மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. கடைசியாக கர்நாடகாவை சேர்ந்த எச்.டி. தேவகவுடா, 1996 முதல் 1997 வரை பிரதமராக பதவி வகித்திருக்கிறார். அதன்பின்னர் 3 தசாப்தங்களாக தென்மாநிலங்களில் இருந்து பிரதமராக யாரும் வரவில்லை.
இந்த சூழலில் 2026 சட்டசபை தேர்தல் வெற்றியை கட்சி பயணத்தின் இறுதி இலக்காக எடுத்து கொள்ளாமல் அதனை கடந்தும் தவெக பயணிக்க வேண்டிய தேவையை அக்கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு பக்கம் விஜயை சுற்றி அடுத்த பிரதமர் நீங்கள் என்று பேச்சுக்கள் தொடர்ந்து எழும் நிலையில் இது குறித்து எதுவும் பேசாமல் விஜய் அமைதி காத்து வருவது ஒரு வேளை விஜய்க்கு பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.