அரசியல்

முதல்வர் வரும்போது எதிர்கட்சித் தலைவர் எழுந்து நிற்கணுமா? ரூல்ஸ் சொல்வது என்ன?

By Christon
17 Aug 2026, 03:37 PM
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விவாதங்களின் போது, முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சட்டப்பேரவை நடைமுறைகளையும், உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் பார்க்கலாம்.

முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா?:

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகளில், முதலமைச்சர் அல்லது வேறு எந்த அமைச்சரும் அவைக்குள் நுழையும்போது அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள விதி இல்லை.

மாறாக, சட்டப்பேரவை நடைமுறையில் சபாநாயகர் அவைக்குள் நுழையும்போது உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, சபாநாயகர் தனது இருக்கையில் அமரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பது அவையின் விதிமுறையுடன் நேரடியாக தொடர்புடையது. முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்பது அதே வகையான கட்டாய விதி எனக் கூற முடியாது.

சபாநாயகருக்கான மரியாதை ஏன் முக்கியம்?

சட்டப்பேரவையில் சபாநாயகர்தான் அவையின் நடவடிக்கைகளை நடத்தும் அதிகாரம் கொண்டவர். உறுப்பினர்கள் யார் பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும், அவையில் ஒழுங்கை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதில் சபாநாயகருக்கு முக்கிய அதிகாரங்கள் உள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளில், உறுப்பினர் தனது இருக்கையில் அமரும்போதும் வெளியேறும்போதும் சபாநாயகர் இருக்கையை நோக்கி வணக்கம் செலுத்த வேண்டும் என்றும், சபாநாயகர் பேசும்போது உறுப்பினர் எழுந்து நிற்கவோ அவையை விட்டு வெளியேறவோ கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் நிலை என்ன?

முதலமைச்சர், அரசின் தலைவராகவும் சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவராகவும் இருப்பவர். சட்டப்பேரவை நடைமுறையில் முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவராகவும், அவையின் Leader of the House ஆகவும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

ஆனால், அந்த பதவியின் அடிப்படையில் முதலமைச்சர் அவைக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்ற தனிப்பட்ட விதி இல்லை.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் அவைக்குள் வரும்போதும் அவர்களுக்காக அனைத்து உறுப்பினர்களும் கட்டாயமாக எழுந்து நிற்க வேண்டும் என்ற பொதுவிதி இல்லை.

அவையில் உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்

சட்டப்பேரவை என்பது விவாதம் மற்றும் சட்டமியற்றலுக்கான ஜனநாயக அமைப்பு என்பதால், உறுப்பினர்கள் சில முக்கிய ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும்.

* சபாநாயகர் அவைக்குள் நுழையும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும்.
* சபாநாயகர் தனது இருக்கையில் அமர்ந்த பிறகு உறுப்பினர்கள் அமர வேண்டும்.
* சபாநாயகர் பேசும்போது உறுப்பினர்கள் குறுக்கிடக் கூடாது.
* ஒருவர் பேசும்போது அவருக்கும் சபாநாயகர் இருக்கைக்கும் இடையில் மற்றொரு உறுப்பினர் குறுக்கே செல்லக் கூடாது.
* அவையில் தேவையற்ற சத்தம், குழப்பம் அல்லது ஒழுங்கற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
* உறுப்பினர் தனது இருக்கையில் அமரும்போதும் வெளியேறும்போதும் சபாநாயகர் இருக்கையை நோக்கி மரியாதை செலுத்த வேண்டும்.

அப்படியானால் முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்பது என்ன?

முதலமைச்சர் அவைக்குள் வரும்போது சில உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்பது அரசியல் அல்லது அவை மரபு சார்ந்த நடைமுறையாக இருக்கலாம். ஆனால், அதை சபாநாயகர் வரும்போது எழுந்து நிற்பதைப் போன்ற கட்டாய சட்டப்பேரவை விதி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

எனவே, “முதலமைச்சர் அவைக்குள் வந்தால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும்” என்பது கட்டாய விதி என்று கூறுவதைவிட, சபாநாயகரின் வருகையின்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்பதே விதிமுறைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை விதியாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்போதைய செயல்பாடுகள், உறுப்பினர்கள், அலுவல்கள் மற்றும் விவாதங்கள் அதிகாரப்பூர்வ National eVidhan தளத்திலும் பதிவாகி வருகின்றன.

தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் இப்படியிருக்கும் நிலையில், இன்றைய தினம் அமைச்சர் ரமேஷ் எதிர்கட்சித் தலைவர் முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்கவேண்டும் என்று கூறியது, சட்டமன்ற விதிகளை அறியாத முதிர்வை காட்டுவதாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.