அரசியல்

திமுகவை சீண்டிய அமைச்சர் நிர்மல் குமார்.. டென்ஷன் ஆன சபாநாயகர்!

By Christon
18 Aug 2026, 11:20 AM
திமுகவை விமர்சிக்கும் வகையில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில், கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அமைச்சர் நிர்மல்குமார் பேசிய சில கருத்துக்கள் அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்குச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கண்டனம் தெரிவித்து அவைக்குறிப்பில் இருந்து அந்தப் பேச்சை நீக்க உத்தரவிட்டார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "ஆகஸ்ட் 12-ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என கர்நாடக அரசு உறுதியளித்த பிறகே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கர்நாடக அரசு தற்காலிக நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளதுடன், விசாரணைக்குப் பின் கூடுதல் நிவாரணம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் 'கொலை' எனச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் விஜய், கர்நாடக அரசின் விளக்கத்தை ஏற்க முடியாது எனவும், விரிவான விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.

அவையில் எழுந்த அமளி

தொடர்ந்து பேசிய அமைச்சர், "ஒரு சிலருக்குத் திடீரென தமிழ் பாசமும், தமிழர் பாசமும் பொங்குகிறது" என்று விமர்சித்துப் பேசினார். அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் கடும் எதிர்ப்பு

அவையில் ஏற்பட்ட பரப்பரப்பைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சரின் பேச்சைக் கண்டித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிட்டார்.

அப்போது பேசிய சபாநாயகர், "கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அது தொடர்பான கருத்துகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும். தீர்மானத்திற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். யாருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அமைச்சர் இதுபோன்று பேசுகிறார் என்று தெரியவில்லை. உறுப்பினர்கள் அனைவரும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டிய கருத்துகளை மட்டுமே பேச வேண்டும்" என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.