அரசியல்

"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை"- ராகுல் காந்தி பேச்சு!

By Christon
18 Apr 2026, 01:33 PM
"பாஜகவுக்கு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை" என்று ராகுல் காந்தி அதிமுகவை சாடியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக இன்று சென்னை வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தமிழ்நாட்டுடனான தனது உணர்வுப்பூர்வமான பிணைப்பு குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேடையில் பேசிய அவர், "இயற்கையாகவே தமிழக மக்களுடன் எனது உறவு மேம்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு வருவது, உரையாற்றுவது எனக்கு எப்போதுமே மரியாதைக்குரிய விஷயமாகும். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல, தமிழ்நாட்டில் பிறக்கவில்லை, எனது குடும்பம் தமிழ்நாடு அல்ல. ஆனால், தமிழ்நாட்டுடன் எப்போதுமே என்னுடைய உணர்வுகள் ஒன்றியிருக்கின்றன.

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் எப்போதெல்லாம் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, கலாசாரத்தைத் தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக உணர்ந்திருக்கிறேன். நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவந்தார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதே அவர்களின் திட்டமாக இருந்தது. தென் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களின் வலிமையைக் குறைப்பதே அவர்களின் எண்ணம். அந்த மசோதாவை நாம் தோற்கடித்து முறியடித்தோம்.

பாஜகவினருக்கு என்ன தேவை என்றால், அவர்கள் சொல்வதைக் கேட்க டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு கூட்டாளி தேவை. அமித் ஷா, நரேந்திர மோடி சொல்வதைக் கேட்க அவர்களின் உத்தரவுகளைச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு முதல்வர் வேண்டும். தமிழ் வரலாறு, மொழி கலாசாரம் ஆகியவற்றை பாஜகவால் தொடக்கூட முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் தமிழினத்திற்கு எதிரானவர்கள்.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஒரே நாடு, ஒரே மொழி என்று பிரதமர் மோடி சொல்லும்போது அவர் அரசமைப்புச் சட்டத்தையே தாக்குகிறார். தமிழ் மக்களின் மகத்துவம் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆயிரம் ஆயிரமாண்டு கால வரலாற்றை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.