26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளதை ஒட்டி, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Sep 25, 2024 - 06:41
Sep 25, 2024 - 06:44
 0
26 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.. தீவிரவாத அச்சுறுத்தலால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஜம்மு காஷ்மீரில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது கடந்த 2014ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 5 ஆண்டுகால பதவிக் காலம் கொண்ட சட்டசபையுடனும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபையே இல்லாததாகவும் இருக்கும் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.

இதில் முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை [செப்.18] வாக்குப்பதிவு நடந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தல் நடந்ததால் ஏராளமான மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 60.21% வாக்குகள் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீரில் 2ஆம் கட்ட தேர்தல் இன்று தொடங்குகிறது. இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று [செப்.25] தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ள நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலின் போது, பயங்கரவாத தாக்குதல் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆறு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல்களுக்கு அதிக வாய்ப்புள்ள மலை பிரதேங்களில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகள் 2021 முதல் பத்துக்கும் மேற்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், ரியாசியில் யாத்ரீகர்களின் பேருந்து மீது நடத்தப்பட்டதில் ஒன்பது பேர் இறந்தனர். 3ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow