உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்... மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு!

By Sumalekha
18 Aug 2026, 04:45 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து கவலைகள் எழுந்து வந்த நிலையில், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

73 வயதான இம்ரான் கான், 2023 ஆகஸ்ட் முதல் பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

48 மணி நேரத்துக்குள் மருத்துவமனை!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இம்ரான் கானை 48 மணி நேரத்துக்குள் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும். மேலும், செப்டம்பர் 16-ம் தேதி வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட வேண்டும் என அவரது செய்தித் தொடர்பாளர் நயீம் ஹைதர் பஞ்சுதா தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி வரவேற்றுள்ளது. "இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. ஆனால் இது முன்பே வந்திருக்க வேண்டும். அவரது கண் பார்வை மற்றும் ஒட்டுமொத்த உடல்நிலை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது" என PTI செய்தித் தொடர்பாளர் சுல்ஃபிகார் புகாரி தெரிவித்துள்ளார்.

உடல்நிலை குறித்து முன்னாள் அதிபர் கவலை:

இம்ரான் கானின் மருத்துவ அறிக்கைகள் கவலைக்குரிய வகையில் இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வியும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதிகப்படியான பதற்றம், இதயத் துடிப்பு அதிகரித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க 24 மணி நேர Holter Monitor பரிசோதனை உள்ளிட்ட கூடுதல் மருத்துவ கண்காணிப்புகள் தேவை என்றும் அல்வி தெரிவித்துள்ளார்.

நீண்டகால தனிமைப்படுத்தல் அவரது உடல் மற்றும் மனநலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், உடனடியாக மருத்துவமனைச் சூழலில் சுயாதீன மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குடும்பத்தினரையும் மருத்துவர்களையும் சந்திக்க அனுமதி இல்லை?

இம்ரான் கானின் மகன்களான சுலைமான் கான் மற்றும் காசிம் கான் ஆகியோரும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஏழு மாதங்களாக குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பின்னர், அவரது சட்டரீதியான சிக்கல்கள் தீவிரமடைந்தன. அரசு பரிசுகள் தொடர்பான வழக்கு, சட்டவிரோத திருமணம் உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். சில தீர்ப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சில வழக்குகளில் மேல்முறையீடுகளும் நிலுவையில் உள்ளன. தன் மீதான குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் மறுத்து வருகிறார்.

2018-ல் ஆட்சிக்கு வந்த PTI, இன்றளவும் கணிசமான மக்கள் ஆதரவை கொண்டுள்ளது. 2024 பொதுத்தேர்தலுக்கு முன்பு அக்கட்சியின் தேர்தல் சின்னம் நீக்கப்பட்டதால், அதன் வேட்பாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறை நிலை தொடர்பான விவகாரத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.