உலகம்

BMW காரில் பிரேக் பிரச்சனை.. 15 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக திடீர் அறிவிப்பு

By leninakathiya
12 Sep 2024, 01:46 PM
பிரேக்குகள் பழுதடைந்ததை எழுந்த புகாரை அடுத்து, பி.எம்.டபள்யூ கார் நிறுவனம் 15 லட்சத்துக்கும் அதிகமான கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

உலகளவில் மிகப்பெரிய கார் நிறுவனமாக பி,எம்.டபள்யூ [BMW] கார் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இந்த கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கிலாந்து, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளை BMW கார் நிறுவனம் தனது உற்பத்தி மையத்தை நிறுவியுள்ளது. 

கடந்த 2023ஆம் ஆண்டு 20,50,000க்கும் மேற்பட்ட கார்களை உலகெங்கிலும் விற்பனை செய்துள்ளது. சீனாவில் சுமார் 3,70,000 கார்களையும், அமெரிக்காவில் 2,70,000 கார்களையும், ஜெர்மனியில் 1,50,000 கார்களையும், தென் கொரியாவில் 70,000 கார்களையும் மற்றும் பிரான்சில் 60,000 கார்களையும் விநியோகிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

BMW நிறுவனம் ஏப்ரல் மாதத்திலேயே, இந்த சிக்கலைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தியது. ஆனால், நிறுவனத்தின் இந்த அறிவிப்பால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், பெரியளவில் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஜூன் 2022 மற்றும் ஆகஸ்ட் 2024க்கு இடையில் தயாரிக்கப்பட்ட கார்களில் இந்த பிரச்சனை அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், BMW X1, Mini Cooper மற்றும் Rolls-Royce Spectre உள்ளிட்ட மாடல்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

BMW செவ்வாயன்று சுமார் 1.5 மில்லியன் வாகனங்களை அவற்றின் பிரேக்கில் உள்ள சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறுவதாகக் கூறியது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் விநியோகம் செய்யப்படாத சுமார் 3,20,000 வாகனங்களில் இந்த குறைபாடு உள்ளதையும் அந்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இதனால், அடுத்த ஒரு மாதத்திற்கு, தனது கார் விநியோகத்தை மெதுவாக்கும் எனவும் அந்த நிருவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த குறைபாடுகளை சரி செய்யும் பணிக்காக பல மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்களை திரும்பப் பெறுவதால் அடுத்த ஆண்டுக்கான கார் விற்பனை ஏமாற்றமளிக்கும் வகையில் அமையும் என்றும் ஆண்டு வருவாய் 18.9 பில்லியன் டாலருக்கு கீழே கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.