தமிழ்நாடு

பிரபல ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது....தனிப்படை போலீசார் நடவடிக்கை

By Jayakumar
06 May 2025, 03:10 PM
வடசென்னை தாதா நாகேந்திரனின் அஜீத் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடி நாகேந்திரனின் 2வது மகன் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கூலிப்படை கும்பலால் கொடூரமாகன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் வழக்கு விசாரணையின் போது ரவுடி திருவேங்கடம் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக பிரபல ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வடசென்னை தாதா நாகேந்திரனின் மகன் அஜீத் ராஜா என்பவரை புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணை

நாகேந்திரனின் 2வது மகனான அஜீத் ராஜாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் ஏற்கனவே நாகேந்திரன் கைதாகி உள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரவுடி நாகேந்திரனின் 2வது மகனும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது வழக்கில் தொடர்பா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனின் 2வது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.