தமிழகத்தில் கோடை வெப்பம் நிலவி வந்த சூழலில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே இன்று தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இன்று (மே 16) தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் வெப்பம் தணிந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 17) தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.