தமிழ்நாடு

வாட்ஸ்ஆப் மூலம் தொடர் தொல்லை.. மேயர் பிரியா பரபரப்பு புகார்!

By Christon
27 Jul 2026, 03:09 PM
சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தொல்லை தருவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தமக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்ந்து இடையூறு அளித்து வருவதாகத் தெரிவித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தமிழகத்தின் இளம் மேயரான பிரியா, சென்னை காவல் ஆணையரிடம் வழங்கிய புகாரில், சில மர்ம நபர்கள் இணையதளங்கள் வாயிலாகத் தம்மைப் பற்றித் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வாட்ஸ்ஆப் மூலம் சிலர் இடைவிடாது தொந்தரவு அளிப்பதுடன், தமது புகைப்படங்களைத் தவறாகச் சித்தரித்துப் பகிர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாம் பேசிய வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்தும் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தம்மைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் பிரியா கோரியுள்ளதைத் தொடர்ந்து, இந்த மனு மீது காவல்துறையினர் விரைவில் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.