தமிழ்நாடு

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

By nagalekshmi
11 Apr 2025, 03:30 PM
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜா தமிழ் மாறன், அறிவு நிதி தமிழ் மாறன் ஆகியோர் இயக்குநர்களாக உள்ள சைதாப்பேட்டை சிஐடி காலனியில் செயல்பட்டு வரும் TrueDom கம்பெனி கடந்த 2013-ஆம் ஆண்டு திருப்பூரில் காற்றாலை அமைப்பதாக கூறி தனியார் வங்கியிடம் இருந்து ரூ. 22.48 கோடியை கடனாக பெற்றுள்ளது. இந்த கடனுக்காக கே.என் நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் மற்றும் அவரது நிறுவனமான TVH கட்டுமான நிறுவனம் உத்தரவாத கையெழுத்து போட்டுள்ளனர்.

பின்னர், TrueDom கம்பெனி, வங்கியில் இருந்து தான் வாங்கிய ரூ. 22.48 கோடி உள்ளிட்ட 30 கோடி பணத்தை மூன்று போலி கம்பெனிகள் மூலம் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்திவரும் TVH கம்பெனிக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு சிபிஐ இந்த மோசடியை கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தது. இச்சம்பவம் தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கே.என்.ரவிச்சந்திரன் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜரான நிலையில் நாளை மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.