தமிழ்நாடு

நெய்வேலியில் ‘இரிடியம்’ விற்பனை கும்பல் கைது.. 400 கோடி ரூபாய் பேரம்!

By Christon
26 Jul 2025, 05:53 PM
நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சிலர் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதை 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப் பேரம் பேசி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக இரிடியம் விற்பதாகக் கூறி வந்தவர்களை போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

பின்னர், போலீசார் மாறுவேடத்தில் அவர்களிடம் இரிடியம் வாங்க வருபவர்களைப் போல பேச்சுவார்த்தை நடத்தினர். இரிடியத்தைப் பார்க்க வேண்டுமென்றால், வாங்குவதற்கு முன் பணம் தர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். வெளிநாட்டில் விற்பனை செய்ய 25 லட்சம் ரூபாய் முன்பணம் தருவதாக போலீசார் அவர்களிடம் பேரம் பேசினர்.

இந்த பேரத்தைத் தொடர்ந்து, 25 லட்சம் ரூபாய் கொடுப்பதற்காகத் திட்டமிட்ட குற்ற தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மாறுவேடத்தில் சென்றனர். இதை நம்பிய இரிடியம் வைத்திருப்பவர்கள், போலீசாரை ரகசியமான ஒரு இடத்திற்கு வரவைத்துள்ளனர். ரகசிய இடத்திற்குச் சென்று இரிடியத்தைப் பார்த்த போலீசார், உடனடியாக மற்ற போலீசாருடன் சேர்ந்து அந்தக் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

இந்தச் சம்பவத்தில், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சந்திரசேகரன், முருகன், விக்னேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு இரிடியம் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், இது உண்மையான இரிடியம்தானா அல்லது போலி இரிடியமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இரிடியம் என்றால் என்ன?

இரிடியம் என்பது மிகவும் அரிய மற்றும் விலைமதிப்பற்ற ஒரு தனிம உலோகம். உலக அளவில் வருடத்திற்கு மூன்று டன் மட்டுமே வெட்டி எடுக்கப்படும் இரிடியம், 1803 ஆம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த உலோகம் அதன் தனித்துவமான பண்புகளால் குறிப்பிடத்தக்கது. இது மிக அதிக அளவிலான வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இதன் உருகுநிலை 2466° செல்சியஸ் (இது சுமார் 4470° ஃபாரன்ஹீட்டிற்கு சமம்) என்ற மிக உயர்ந்த அளவில் இருப்பதால், அதிக வெப்பநிலையில் செயல்பட வேண்டிய கருவிகள் மற்றும் உபகரணங்களில் இது பயன்படுத்தப்படுகிறது.