தமிழ்நாடு

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

By Sumalekha
18 Jun 2026, 01:34 PM
“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்று 38 நாட்கள் கடந்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தவெக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 150 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 130 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது” என தெரிவித்தார்.

மேலும், தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக கூறப்பட்ட ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் விமர்சித்தார்.

“மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காவிரி நீர் பிரச்சினையில் கூட அரசு தீவிர முயற்சி எடுக்கவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல், “சிங்கப்பெண் பாதுகாப்புப் படைக்கு கூட தனியாக பாதுகாப்புப் படை அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று கூறிய அவர், மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, தனது மகன் மிதுன் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். “என் மகன் மிதுன் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். அவருக்கு எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படாது” என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதற்க்கு முன்னதாக, சி.வி.சண்முகம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவி தொடர்பாக பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தனது விளக்கத்தின் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.