தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

By Christon
26 Sep 2025, 11:48 AM
சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட 5 முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உட்பட ஐந்து முக்கிய இடங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. போலீசார் நடத்திய சோதனையில் இவை அனைத்தும் புரளி எனத் தெரியவந்தது. மீண்டும் மீண்டும் இது போன்ற மிரட்டல்கள் தொடர்வதால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.

ஆளுநர் மாளிகைக்கு மிரட்டல்

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் உடனடியாகச் சோதனை நடத்தியதில் அது புரளி என்பது தெரிய வந்தது. கிண்டி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்றங்களுக்கு மிரட்டல்

இதேபோன்று, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளைக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உயர் நீதிமன்றப் பதிவாளரின் இமெயிலுக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிற இடங்களில் சோதனை

தலைமைச் செயலகத்திற்கு அருகில் உள்ள ராணுவ அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் எஸ்.வி. சேகர் வீட்டுக்கு கொடுக்கப்படும் 3-வது மிரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவரும் மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.