தமிழ்நாடு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

By VASUKI
18 Sep 2025, 03:28 PM
மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.
கே.கே. நகரைச் சேர்ந்த மதியழகன் என்பவர், கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகமான மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகியோரிடம், அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார்.

மோசடி நடந்தது எப்படி?

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் உயர் அதிகாரிகளைத் தெரியும் எனக் கூறி, ஒரு அரசு வேலைக்கு ரூ. 7 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை கொடுத்தால் வாங்கித் தருவதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.

இதனை நம்பிய மதியழகன், தனக்கும் தெரிந்த 15 பேர் சார்பாக மொத்தம் ரூ. 45,41,000 பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் இருந்ததால், மதியழகன் கடந்த மார்ச் மாதம் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், இது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, பினகாஷ் எர்னஸ்ட் நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது மனைவி வான்மதியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பினகாஷ் எர்னஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.