அரசியல்

திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

By Jayakumar
17 Apr 2025, 08:44 AM
ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்
திமுக ஆட்சியில் நிரந்தரம் இல்லை

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியத்தில் பாக பூத் செயலாளர்கள் மற்றும் பாக நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மேலகோபாலபுரம், வ.புதுப்பட்டி ,கான்சாபுரம், சேதுநாராயணபுரம் , வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தடைப்பட்டது. உடனே ராஜேந்திர பாலாஜி திமுக ஆட்சியில் எதுவும் நிரந்தரம் இல்லை. மின்சாரமும் நிரந்தரம் இல்லை, வாழ்க்கையை கேள்விக்குறியாகிவிட்டது என தெரிவித்தார்.

உழைப்பர்களுக்கு மரியாதை கிடையாது

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளுவதற்கு கண்மாய்களில் இலவசமாக அனுமதி வழங்கினோம்.ஆனால் திமுக ஆட்சியில் அதை நிறுத்தி விட்டார்கள். திமுக போன்ற கேவலமான, அவமானமான, அருவருக்கத்தக்க அரசு எதுவும் கிடையாது. பாட்டாளிகளை உழைப்பாளிகளை நசுங்குகின்ற அரசாங்கமாக திமுக அரசாங்கம் உள்ளது.திமுக ஆட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. பிழைப்பவர்களுக்கு மட்டும்தான் மரியாதை. உண்மையாக உழைப்பவர்கள் திமுகவில் கண்ணீர் சிந்துகிறார்கள். ஏழைகள் நன்றாக வாழ வேண்டுமென்றால், ஏழைகளின் பசியை நன்கு அறிந்த எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வரவேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும். புத்திசாலியாக மட்டும் இருந்தால் போதாது, ஈகை குணம் உள்ளவராக இருந்தால் தான் தர்மம் தழைக்கும். ஈகையும், புத்திசாலித்தனமும், திறமையும், தர்மமும் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்” என பேசினார்.