இந்தியா

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து: போராட்டத்தில் வன்முறை; பாஜக அலுவலகத்துக்குத் தீ!

By Christon
24 Sep 2025, 05:01 PM
லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அங்குள்ள மக்கள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
லடாக்கிற்குத் தனி மாநில அந்தஸ்து கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில், வன்முறை வெடித்தது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்து, கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கை அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 10-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தது.

மோதல் மற்றும் வன்முறை

மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்குத் தீ வைத்தும், கல்வீசித் தாக்குதல் நடத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.