தமிழ் சினிமாவில் தலைசிறந்த டாப் 10 படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால், அதில் நிச்சயம் கமலின் விருமாண்டி திரைப்படம் இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என தான் தலைப்பு வைக்கப்பட்டது. அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி படத்தின் தலைப்பை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கமலும், விருமாண்டி படம் தொடர்பான ஒரு காணொளியில், “சண்டியர்ன்னு பேர் வச்சா அண்ணன் கிருஷ்ணசாமி கோச்சிப்பாரு …” என தெரிவித்திருப்பார்.
இந்நிலையில் தற்போது ஜூன் 5 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ள கமலின் "Thug Life" திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு-
”தனது திரைப்படத்திற்கு "Thug life" எனும் பெயரை நடிகர் கமல் தவிர்க்க வேண்டும். மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது.
"Thug Life" எனும் பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட "Thug" எனும் பெயர் நடிகர் கமல்ஹாசன் அவர்களால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல. ஏனெனில் Thugs" என்றால் பொறுக்கிகள்-மூர்க்கர்கள்-போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் Thugs & Pindaris என்ற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். Thugs & Pindaris என்பவர்கள் ஒளரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு, இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும். அவர்கள் மத ரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்பலாவர். அவர்களுக்கென்று நல்ல கொள்கையோ, கோட்பாடோ, ஒழுக்கமோ, பண்போ கிடையாது.
வழிப்போக்கர்களோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் உடைமைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை, அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.
ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது. பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமூகத்தில் பரவியும், பதுங்கியும் கிடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டு தான் வருகிறது.
அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடைமைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, அதிகாரிகளையே கொன்றுவிட்டு கனிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, கெளரவ சாதியக் கொலைகள் செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள் தான். அம்மூர்க்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.
Thugs & Pindaris இந்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைப்படங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல!
எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு "Thug life" எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமல் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தக் ஃலைப் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், திரைப்படம் வெளியீட்டிற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் பெயரை மாற்றக்கோரி அரசியலில் தன் இருப்பிடத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக செய்கிறாரா? என நெட்டிசன்கள் அவரது பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.