'பக்தர்களின் மனது காயம்பட்டுள்ளது’.. ராகுல் காந்தி வேதனை!

இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது

Sep 21, 2024 - 10:54
Sep 21, 2024 - 10:56
 0
'பக்தர்களின் மனது காயம்பட்டுள்ளது’.. ராகுல் காந்தி வேதனை!
Rahul Gandhi

டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகளவில் புகழ்பெற்றது. இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள்.  திருப்பதியில் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் சுவாமி  ஏழுமலையானை போன்றே மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. 

நமக்கு தெரிந்தவர்கள் யாராவது திருப்பதி கோயில் சென்றுவிட்டு வந்தால், நாம் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி லட்டு எங்கே? என்றுதான். இப்படி பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த திருப்பதி லட்டுகள் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் பேசப்படுகிறது. திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டே இதற்கு காரணமாகும். 

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக பரபரப்பு குற்றம்சாட்டி வந்தார். இதை உறுதிப்படுத்தும்விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  

அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வரும் நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்துள்ளதாக வரும் தகவல்கள் அவர்களின் மனதில் ஈட்டியை பாய்ச்சியுள்ளது. 

இந்த ஆய்வறிக்கை உண்மை என்றால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் (லட்டு) அசுத்தம் செய்யப்பட்டதாக வரும் தகவல்கள் வேதனை அளிக்கின்றன. இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் கடவுள் பாலாஜியை வணங்கி வருகின்றனர். இந்த விவகாரம் பக்தர்களின் மனதை மிகவும் காயப்படுத்தும். இது குறித்து முழுமையாக ஆராய வேண்டும். நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் வழிபாட்டு தலங்களின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow