அரிதாரம் டூ அவதாரம்...மஹாவிஷ்ணு சுய புராணம்!

அரிதாரம் பூசும் சினிமாவில் தோற்றதால், ஆன்மிக சொற்பொழிவாளர் அவதாரம் எடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறாராம் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் மஹாவிஷ்ணு. அரிதாரம் டூ அவதாரம் என மாறியிருக்கும் மஹாவிஷ்ணுவின் புராணம் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்...

Sep 15, 2024 - 12:05
 0

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய சொற்பொழிவாளரும், பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனருமான மகாவிஷ்ணுவை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.

இந்த விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

16 வயதிலேயே மேடை பேச்சாளரான  மகாவிஷ்ணுவுக்கு, சினிமா துறையில் நுழைந்து பெரிய ஆளாகவேண்டும், கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால் சினிமாவில் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தபோதும், மகா விஷ்ணுவால், சினிமா துறையில் நிலைக்க முடியவில்லை.

அரிதாரம் பூசும் சினிமா கைவிட்டாலும் பணம் சம்பாதிக்க ஆன்மிகம் கைவிடாது என்று கணக்குப் போட்டவர், அடுத்ததாக ஆன்மீகப் பேச்சாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இதற்காக, எழும்பூரைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை கேட்டு அறிந்துள்ளார். அதே நேரம், ஆன்மீகத்தை  மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பதை வேறு ஒரு நபரிடமும் கற்று தெரிந்திருக்கிறார்.
இந்த பயிற்சிகளை வைத்துத்தான், இந்த சிறு வயதிலேயே இவ்வளவு ஞானமா? என கேட்பவர்கள் மெய் மறந்து வியக்கும் அளவுக்கு கட்டுக் கதைகளை அள்ளி விடுவது, கண்கட்டு வித்தை காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆன்மீகச் சொற்பொழிவில் பங்கேற்க பத்தாயிரம், 20 ஆயிரம் என பேக்கேஜிங் முறையையும் அறிமுகப்படுத்தியதோடு, முக்கிய நகரங்களில் சொற்பொழிவு கூட்டங்கள் நடத்தி வசூல்மேளாவிலும் ஈடுபட்டிருக்கிறார்.

இப்படி தன்னை பிரபலமாக்கியவர், பரம்பொருள் பவுண்டேஷனைத் தொடங்கி, யூடியூப் சேனலிலும் தன்னை பிரபல்யப்படுத்தி இருக்கிறார். தற்போது கைதாகி உள்ள நிலையில், தான் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கூறியுள்ளது போலீசாரையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

சிறையிலேயே தனக்கு ஆதரவாளர்களை உருவாக்குவதாகவும், சிறை மீண்ட பின்னரும், ஆன்மீகச் சொற்பொழிவு கூட்டங்களை நடத்துவேன் எனவும் போலீசாரிடம் மஹா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் மகாவிஷ்ணுவின் வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த போது சுமார் 10லட்சம் வரை பணம் இருந்துள்ளது. இதனால்,  அந்த பணம் வந்த வழிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல மகா விஷ்ணு ஆஸ்திரேலியா சென்றது வெறும் ஆன்மிக சொற்பொழிவுக்காக மட்டும்தானா என்பதும் போலீசாரின் சந்தேகமாக உள்ளது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த சாமியார்கள், ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சம்பாதித்தவர்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கரீபியன் கடற்பகுதி அருகிலுள்ள தீவுகளை விலைக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மகாவிஷ்ணுவும் தான் சம்பாதித்த பணத்தில்  ஆஸ்திரேலியா அருகே ஏதாவது தீவு வாங்கி வைத்துள்ளாரா என்பதுதான் அந்த சந்தேகம்.

இந்த சந்தேகத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது, மஹா விஷ்ணு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் சந்திரனை வைத்து நான் செய்த குறும்பு என்னும் பெயரில் திரைப்படத்தை தயாரித்து இயக்கத் தொடங்கினார். ஆனால் பணம் இல்லாமல் பாதியிலேயே அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. தற்போது அந்த திரைப்படத்தை மீண்டும் தொடங்க மஹாவிஷ்ணு திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்திருப்பதுதான்...

போலீசாரின் தொடர் விசாரணையில் மஹாவிஷ்ணுவின் சுய புராணங்கள் இன்னும் தம்பட்டமாகும் என்றே தெரிகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow