இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை

தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Aug 18, 2024 - 07:14
 0
இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை; மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் தற்போது வரை குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை

2020ஆம் ஆண்டு உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸால் பல லட்ச மக்கள் உயிரிழந்தனர். தற்போது அதே வரிசையில், எம்.பாக்ஸ் அல்லது குரங்கம்மை எனப்படும் புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அப்பிரிக்க நாடான காங்கோவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த குரங்கம்மை வைரஸ்(Monkey Pox) தற்போது வரை 537 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வந்த இந்த வைரஸ் தற்போது 116 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 160% அளவுக்கு குரங்கம்மை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

குரங்கம்மை(Monkey Pox) நோய்த்தொற்றை பொது சுகாதார நெருக்கடிகாக அறிவிக்க ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் வலியுறுத்தியதையடுத்து உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. “இதைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தற்போது பரவி வரும் நோய்த் தொற்று கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும்” என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.  

குரங்கம்மை பரவுவது எப்படி? 

குரங்கம்மை(Monkey Pox) நோய்த்தொற்று உள்ளவருடன் நெருக்கமாகக் பழகுவதன் மூலம் இந்த வைரஸ் எளிதாகப் பரவுகிறது. அதாவது, இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் உடலுறவு கொள்வது, தோலோடு தோல் உரசுவது, அல்லது அந்த நபருடன் நெருக்கமாகப் பேசுவது, சுவாசிப்பது ஆகிய செயல்களின் மூலம் இந்தத் தொற்று பரவும். தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும் அபாயத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. மேலும் குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குரங்கம்மை அறிகுறிகள்: 

காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை இந்த வைரஸின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும்(Monkey Pox Symptoms in Tamil). காய்ச்சல் நின்றவுடன் தடிப்புகள் தோன்றலாம். பெரும்பாலும், முகத்தில் இது தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவும். பொதுவாக உள்ளங்கைகள், பாதங்கள் வரை பரவும். இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம். 

இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் குரங்கம்மை பரவல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தொற்று நோய் பரவலைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

மேலும் படிக்க: கருணாநிதி நினைவு நாணயத்தை இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அதில், “தற்போது வரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. இருப்பினும், முடிந்தவரை பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதார அமைச்சகம் கவனித்து வருகிறது. எந்த நேரத்திலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கப்பல்கள், விமானங்கள் மூலம் பயணிகளிடமும் தீவிர சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow