தொழில்நுட்ப வளர்ச்சியால் ரீல்ஸ் வீடியோ எடுத்துப் பிரபலமாவதற்காகச் சிலர் பொது இடங்களில் எல்லை மீறிச் செயல்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலாச் சென்ற இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு தெருவின் நடுவே குளியல் துண்டை (Towel) மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடியுள்ளார்.
'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் ஒன்றிற்கு அவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடும் இந்த வீடியோ, கடந்த மே 24-ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுற்றியுள்ள உள்ளூர் மக்கள் அப்பெண்ணை மிரட்சியுடன் பார்க்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் அந்தப் பெண்ணின் செயலுக்குச் சரமாரியாகத் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதித்து நடக்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இது போன்ற அருவருப்பான செயல்கள் வெளிநாடுகளில் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் விதமாக அமைந்துவிடும் என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
An Indian tourist's viral towel dance that shows a complete lack of civic sense. pic.twitter.com/3W1QDNbiDP
— Damn. (@Theonenameddamn) June 8, 2026