தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்திய வடமாநிலத்தவர்கள்.. அலேக்காக தூக்கிய காவல்துறை

By nagalekshmi
19 Apr 2025, 06:32 AM
கடலூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்த போலீசார் 348 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூர், ஆபத்தணபுரம்- கும்பகோணம் சாலையில் வடலூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டபோது காரில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து சொகுசு காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தன்ராஜ் பெரியால் மற்றும் திலிப்சிங் ஆகிய இரண்டு நபர்களை பிடித்து வடலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நெய்வேலி மந்தாரகுப்பம் பகுதியில் உள்ள கணேசன், வடலூரை சேர்ந்த ராம்குமார், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோருக்கு குட்கா போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 29 சாக்கு மூட்டைகளில் 348 கிலோ குட்கா போதைப் பொருட்கள் மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலின் பேரில் வடலூர் காவல்நிலையத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் சென்றுள்ளார்.

பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா போதைப்பொருளை வாங்கினாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 27 பேர் மீது கஞ்சா வழக்கு பதியபட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாகவும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் கூறினார்.