தமிழ்நாடு

உரிமை கோரப்படாத உடல்கள் அடக்கம்.. அரசு சுற்றறிக்கை வெளியிட மனித உரிமை ஆணையம் பரிந்துரை!

By VASUKI
06 May 2025, 01:53 PM
உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்காணித்து, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய பரிந்துரை செய்துள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கடந்த 2018 ம் ஆண்டு இறந்த 70 வயது முதியவர் ராஜாராமன் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 சக்கர குப்பை வண்டியில் பொதுவெளியில் எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இந்த வழக்கில் மரணத்திற்கு பிந்தைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறிய செயல் எனக்கூறி தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தார்.

அதன் படி உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வதை உணர்வு பூர்வமான அணுக வேண்டும் எனக்கூறி, தமிழகம் முழுவதும் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகள் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.