தமிழ்நாடு

விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

By Christon
16 Apr 2026, 10:54 AM
சென்னையில் விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீறி 'ரோடு ஷோ' நடத்தியதாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது சென்னையில் ஒரே நாளில் 3 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை டி.நகர், நுங்கம்பாக்கம் மற்றும் வேப்பேரி ஆகிய பகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு உள்ள நிலையில், தற்போது மேலும் 3 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுமதி மீறலும் போக்குவரத்து நெரிசலும்

டி.நகர் மற்றும் மாம்பலம் பகுதிகளில் பிரசாரம் செய்யும்போது, 2500 பேருக்கு மேல் கூடக்கூடாது, போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது மற்றும் ரோடு ஷோ நடத்தக்கூடாது என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விதிகளை மீறியதாகத் தேர்தல் அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின் பேரில், மாம்பலம் போலீசார் விஜய், வேட்பாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நுங்கம்பாக்கம் மற்றும் வேப்பேரியில் வழக்கு

இதேபோல, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரோடு ஷோ நடத்தியதற்காக விஜய் மற்றும் வேட்பாளர் ஜே.சி.டி பிரபாகர் மீதும், வேப்பேரி பகுதியில் பொதுமக்களுக்குத் தொல்லை அளித்ததாக விஜய் மற்றும் வேட்பாளர் ராஜ்மோகன் மீதும் அந்தந்த பகுதி போலீசார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.