அரசியல்

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்!

By VASUKI
30 Apr 2025, 03:44 PM
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு அணிவித்தார்.
பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் இன்று தேமுதிக சார்பில் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேமுதிக கழகம் சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் கழக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டதற்கு தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை கழக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அதில் அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன், பொருளாளர் எல். கே. சுதீஷ், கழக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி கழக துணை செயலாளர்கள் பொறுப்பும் அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பேசிய கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் கனவுகளை லட்சியங்களை வென்றெடுப்போம், மற்ற அணிகளுடைய அறிவிப்பு நாளை மே தினம் தலைமைக் கழகத்தில் அறிவிப்பதாகவும், கடலூர் மாவட்டத்தில் ஜனவரி ஒன்பதாம் தேதி மாபெரும் மாநாடு நடத்தப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும், வெகு விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் கேப்டனின் முழு உருவச்சிலை திறக்க வேண்டும், கொடியுடன் சிலையை அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். இன்று அட்சய திருதியை நாளில் கேப்டனின் மோதிரத்தை கழக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற விஜய பிரபாகரனுக்கு பிரேமலதா அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட தொண்டர்களிடையே பல்வேறு தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன, இதில் முக்கிய தீர்மானமாக போப் பிரான்ஸ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டும், ஜம்மு காஷ்மீர் பகல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகளின் உயிர் இழப்பிற்கு வன்மையாக கண்டிப்பதாகவும், மத்திய அரசு எல்லைகளை பலப்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தி பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.